PUBLISHED ON : பிப் 01, 2026

இளம் வயதில் நண்பர்களுடன் சேர்ந்து, விளையாட்டாக ஆரம்பித்த மது, சிகரெட் பழக்கம், பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகளை எடுக்காத என் நெருங்கிய நண்பரை, இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் வெளியில் கொண்டு வர, நான் எந்த வகையில் உதவி செய்யலாம் என்று, சமீபத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டார் ஒ ருவர்.
என் ஆலோசனைகள்
விருப்பம்
மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இப்பழக்கத்தில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று நிச்சயம் விரும்புவர்; அதன் அளவுகோல் தான் மாறுபடும். ஒரு சதவீதமாவது விருப்பம் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது.
இந்த விருப்பத்தை மையப்படுத்தி, குடும்பத்தினர், நண்பர்கள் பேச வேண்டும்.
'நாளை முதல் இப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும்' என்று சொல்லாமல், இதிலிருந்து வெளியில் வருவதற்கான சிந்தனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
இப்பழக்கத்தை நிறுத்துவதால், ஆரோக்கியம் மேம்படும்; நிறைய புதிய நண்பர்களுடன் பேசலாம்; தொழிலில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியும் என்று, அவர் சார்ந்த விஷயங்களை, சந்தர்ப்பம் கிடைக்கும் சமயங்களில் எல்லாம் பேச வேண்டும்.
இவர்கள் பேச்சை தட்டவே மாட்டார் என்று ஓரிரு நண்பர்கள், குடும்பத்தினர் நிச்சயம் இருப்பர்; அவர்கள் தான் பேச வேண்டும்.
இதுவும் ஒரே நாளில் நடக்காது. குறைந்தது ஆறு மாதங்களாவது, கட்டாயப் படுத்தாமல், இயல்பாக பேச வேண்டும்.
அப்போது, இதிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் உறுதிப்பட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தனிமை
மது, சிகரெட் பழக்கம் இருப்பவர்களுக்கு, தங்களை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொள்ளும் சுபாவம் இருக்கும். இவர்களின் தனிமைப்படுத்தும் நேரத்தை, எப்போது எல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம், நண்பர்கள், குடும்பத்தினர், அவர்களுடன் இருந்து தனிமையை குறைக்க வேண்டும்; முடிந்த வரை அவர்களை தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது.
மதுப் பழக்கம் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கவே, இவர்கள் விரும்புவர்; தான் மட்டும் இப்படி இல்லை என்று, தங்கள் செயலை நியாயப்படுத்தும் முயற்சி இது.
இதைத் தவிர்க்க, மதுப் பழக்கம் இல்லாத மற்ற பழைய நண்பர்களை அவர்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அதிகப்படுத்த வேண்டும்.
மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு, வாழ்க்கையில் பெரிய தோல்வி ஏற்பட்டு இருக்கலாம்; வாழ்க்கையையே தோல்வியாக அவர்கள் நினைக்கலாம்; நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல், மது குடிக்கலா ம்.
இப்பிரச்னை, குடும்பத்தில், தொழிலில், ஆரோக்கியத்தில் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலர், 'மாதம் 3 லட்சம் சம்பளம் எதிர்பார்த்தேன் ; 2 லட்சம் ரூபாய் தான் வருகிறது' என்று மதுவுக்கு அடிமையாகி விடுவர்.
பணமோ, வெற்றியோ இவர்களுக்கு பொருட்டல்ல!
வாழ்க்கையில் இவர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள திறந்த மனதுடன் பேசி, தீர்வைத் தேடாமல், மதுவிற்கு அடிமையாகி விடுவர்.
மாதம் 30,000 சம்பாதிக்கும் சிலர், 50,000 ரூபாய் சம்பாதிக்க என்னால் முடியவில்லையே என்று மதுவுக்கு அடிமையாவர்.
அவர்களின் மனநிலையில், இது தவறு என்று புரியாது; இதை மாற்ற வேண்டும். மதுவால் என்னென்ன பாதிப்புகள் என்று சொல்லவே கூடாது. 'இது இவ்வளவு ஆயிடுச்சா, இனி என்ன இருக்கு' என்ற எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
முக்கியமான விஷயம், இவர்களுக்கு அறிவுரை சொல்லவே கூடாது. அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இருக்கவே இருக்காது; அன்பும், அரவணைப்பும் தான் அவர்களை மாற்ற முயற் சிக்கும்.
விதை
இவர்க ளின் உண்மையான பிரச்னை என்ன? அதற்கு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை குடும்பத்தினர், நண்பர்கள் நன்கு அறிவர். அதை பக்குவமாக, எடுத்து சொல்ல வேண்டும்.
இது, நிலத்தை பண்படுத்தி, விதை விதைப்பது போன்ற விஷயம். பயிர் நன்றாக வளரும்; அதில் சந்தேகமில்லை. ஆனால், விதை விதைப்பது போல, இந்த எண்ணங்களை அவர்களின் மனதில் விதைத்து, அதற்கான காலம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். இன்று விதைத்து, நாளை அறுவடை செய்ய லாம் என்று நினைக்கக் கூடாது.
கட்டுப்பாடு
மது, சிகரெட்டிற்கு அடிமையானவர்களுக்கு, அது ஆணோ, பெண்ணோ, 'மதுப் பழக்கம் என் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என்று நினைப்பது தான், இப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதற்கான முதல் அறிகுறி.
எனவே, அவர்களிடம் நண்பர்கள் பேசும் போது, எந்த விதத்திலும் மரியாதை குறைவாக பேசி விடக்கூடாது. அவர்களின் சிறப்புகள், திறமைகள் என்று உயர்த்தி பேசும் போது தான், நம் பேச்சு எடுபடும்.
இப்பழக்கத்தில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வர, இதற்கு நிகரான வேறு ஒன்றை செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சிலருக்கு விதவிதமான, ருசியான உணவுகள் பிடிக்கும். அவற்றை தரும் போது, மது, சிகரெட் இப்போது வேண்டாம் என்று தள்ளி போடுவர்.
சிலருக்கு நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்வது, பேசுவதில் விருப்பம் இருக்கும். இப்படி அவர்களை மிகவும் கவரக்கூடிய விஷயங்களை இதற்கு மாற்றாக தரலாம்.
வாரம் ஒரு முறை இதை செய்ய வைத்தாலே, வெற்றியின் முதல் படியை எடுத்து வைத்துள்ளோம் என்று அர்த்தம்!
டாக்டர் ரவி சாமுவேல்,மனநல ஆலோசகர், சென்னை.94440 22054rsam_ 67@yahoo.co.in

