PUBLISHED ON : ஜூன் 07, 2026

பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி எடுப்பது. சுக பிரசவமாக இருந்தாலும் வலிகளுக்கு விலக்கு கிடையாது. குழந்தையின் எடை அதிகமாக இருக்கும்போதும், வெளியில் வருவதற்கான நிலை சரியாக இல்லாதபோதும், பெண்ணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்வார்கள்.
அது ஆறாத ரணமாக சில மாதங்கள் பெண்களை வாட்டி வதைக்கும். அதற்கான தீர்வை கண்டறிந்துள்ளது, கோவையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்.
நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ருதி ஸ்ரீ கூறுகையில், கணவரும், நானும் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித் துள்ளோம். 2020ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி மருத்துவ உபகரணங்களை தயாரித்து வருகிறோம்.
சுக பிரசவத்தில் குழந் தையின் தலை வெளியேற முடியாமல் சிரமப் படும்போது, பெண்ணுறுப்பில் 'எபிசியோடமி' (Episiotomy) என்கிற அறுவை சிகிச்சை செய்யப்படும்.
சிறிய அறுவை சிகிச்சை என்றாலும் அந்த வலி குணமாக 3 மாதங்களாகும். உட்கார்ந்தால், நின்றால் வலிக்கும். இயற்கை உபாதை ரொம்ப சிரமம்.
எனது 3 குழந்தைகளுமே எபிசியோடமி அறுவை சிகிச்சை மூலம் பிறந்தனர். இரண்டாவது குழந்தை பிறந்தபோது மிகவும் சிரமப்பட்டேன்.
அப்போதுதான் அதற்கான தீர்வை நோக்கி பயணித்தோம்.
மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் கற்றாழை, வேம்பு உள்ளிட்ட மூலிகைகள், ஐஸ்பேக் தொழில்நுட்பத்தில் பிரசவத்திற்கு பின் பயன்படுத்தும் நாப்கின் கண்டறிந்தோம். அறிவியல் ரீதியாக சோதனை செய்தோம்.
மூன்றாவது குழந்தை பிறந்தபோது இதை பயன்படுத்தியதில் ஒரு வாரத்திலேயே குணமாகி அலுவலகம் திரும்பினேன். கடந்த ஆண்டு முதல் இது சந்தைக்கு வந்துள்ளது. காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளோம், என்றார்.
தாய்மார் வேதனை தீரும்
ஸ்ருதியின் கணவர் பரத்ராம் கூறுகையில், இந்தியாவில் மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை முறையால் ஒவ்வொரு ஆண்டும் 1.25 கோடி கர்ப்பிணிகளுக்கு எபிசியோடமி செய்யப்படுகிறது. இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் இல்லை என்று நினைத்து வலியுடன் கடந்து போகிறார்கள். தாய்மார்களின் வேதனையை குறைப்பதற்காக இதை கண்டறிந்தோம். பெரு நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி, தன்னார்வலர்கள் மூலம் ஏழை மக்களுக்கு இதை கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.
