PUBLISHED ON : மார் 29, 2026

எல்லா பருவகால மாற்றங்களையும் எதிர்கொள்ளும் அளவில் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறையாத அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், கோடை வெயில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. இதைக் கடைப்பிடித்தால், மருத்துவமனைக்கு போகாமல் செலவில்லாமல் இருக்கலாம்.
கோடை காலத்தில் உடல்சூடு அதிகமாகும். அதைத் தடுக்க, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
காலை உணவில் கம்பஞ்சோறு, கேழ்வரகு கூழ், சோளச்சோறு, இவற்றுடன் தயிர் மோர் சேர்த்து, சின்ன வெங்காயத்துடன் சாப்பிடலாம்.
தினசரி ஒரு வேளை பழைய சோறு, நீராகாரம், சிறிது தேங்காய் பூ துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து, நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாய், சுண்டை, பாகற்காய், கொத்தவரங்காய், மோர் மிளகாய் வற்றல் என்று ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம்.
இந்த உணவு, சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த கோடைகால உணவு.
சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், வெண்பூசணி சாறு, பன்னீர் திராட்சை, பச்சநாடன் வாழைப்பழம் போன்றவைகளை அனைவரும் தொடர்ந்து நிறைய எடுத்துக் கொள்ளலாம்.
சாப்பிடாமல் பட்டினி விரதம் இருக்கக் கூடாது.
ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது. இது உடல்சூட்டை அதிகப்படுத்தி மலக்கட்டு பிரச்னையை உண்டாக்கும்.
அதிக காரம், அதிக புளிப்பு, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. இதனால் பித்தம் கூடி உடற்சூடு அதிகரிக்கும்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். முடியாவிட்டால் வாரத்திற்கு ஒரு நாளாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடற்சூடு தணியும்.
சளி, இருமல், தொண்டை கரகரப்பு, ஆஸ்துமா, ஜுரம் சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, இரு கண்களுக்கும் நன்றாக எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும். கண்கள் பொங்காது; கண்களின் சூடு குறையும்.
இரவு படுக்கும் போது கை மற்றும் கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவி மசாஜ் செய்து கொண்டு படுக்கலாம்.
வெளியில் சென்று வந்த பிறகு, கண்டிப்பாக முகத்தை, கை, கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
கோடை காலமாக இருந்தாலும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்புதான் வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதய நோயாளிகள் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அம்மை நோய், மஞ்சள் காமாலை நோய், டைபாய்டு காய்ச்சல், மூலம், பவுத்திரம், சிறுநீரக தொற்று போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறலுக்கு மட்டுமல்ல எல்லா நோய்களுக்கும் பக்க விளைவு இல்லாத சித்த மருந்துகளை தகுதிவாய்ந்த சித்த மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள்.
தேவைப்பட்டால் ஆங்கில மருந்துகளையும் சித்த மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
டாக்டர் சா.காமராஜ் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் - ஓய்வு, திருச்சி. 94898 20113, 0431-23 00181

