இஸ்ரேல் மன்னராகவும், நீதிமானாகவும் இருந்தவர் சாமுவேல். அவருக்கு வயதானதால் தன் மகன்களை இளவரசராக்கினார். ஆனால் அவர்களோ அக்கறையின்றி ஆட்சி செய்தனர். இந்நிலையில் இஸ்ரேல் மக்கள், ''அண்டை நாட்டைச் சேர்ந்த பெலிஸ்தியர்கள் எங்களை துன்புறுத்துகிறார்கள்'' என சாமுவேலிடம் மன்றாடினர். அப்போது ஆண்டவர், ''பெத்லகேமைச் சேர்ந்த ஈசாயிடம் போ. ஏனெனில் அவருடைய மகன்களில் ஒருவனை உன் நாட்டுக்கு மன்னராகத் தேர்ந்தெடுத்துள்ளேன்” என சாமுவேலுக்கு உணர்த்தினார்.
சாமுவேல் பெத்லகேம் சென்றார். ஈசாயியின் மகன்களில் ஒருவனான எலியாவை பார்த்ததும் தேர்வு செய்யப்பட்டவன் இவனாக தான் இருக்கும் என நினைத்தார். அப்போது ஆண்டவர், “முகத்தோற்றம், உயரத்தை மட்டும் பார்க்காதே. மனிதர்கள் வேண்டுமானால் முகத்தைப் பார்க்கலாம். ஆனால் நான் மனதை மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.
உடனே ஈசாயியிடம், “உனக்கு வேறு மகன்கள் இருக்கிறார்களா” எனக் கேட்டார்.
“இன்னும் ஒருவன் இருக்கிறான்; அவன் பெயர் தாவீது. ஆடு மேய்க்கச் சென்றுள்ளான்” என்றார் ஈசாய். அவன் வரும் வரை காத்திருந்தார் சாமுவேல்.
சிவந்த மேனி, கண்களில் ஒளியுடன் வந்தான் ஒருவன், 'என் பெயர் தாவீது' என்றான். சாமுவேலிடம், “இவனே மன்னன்” என உணர்த்தினார் ஆண்டவர்.

