
'முருகா' என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும், முப்பெரும்தேவியர்களும் உடன் அமர்ந்து அருள்கிறார்கள். எனவே முருகனை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கியதற்கு சமம் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். அவர் முருகன் மீது பாடியது கந்தலங்காரம். அப்பாடல்களை பாடி நாமும் சொல்லால் முருகனை அலங்கரிப்போம்.
1. கிருபாகரன்
பேற்றைத்தவம்,சற்றும் இல்லாத
என்னைப், பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா
செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத்
தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான்,
குமாரன், கிருபாகரனே. (1)
2. தேசிகன்
ஒளியில் விளைந்த உயர்
ஞான பூதரத்து உச்சியின் மேல்
அளியில் விளைந்ததோர்
ஆனந்தத் தேனை அநாதியிலே,
வெளியில் விளைந்த வெறும்
பாழைப் பெற்ற வெறும் தனியைத்
தெளிய விளம்பியவா,
முகமாறுடைத் தேசிகனே.(8)
3. திருவடி
தாவடி ஓட்டு மயிலிலும்,
தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ
படி மாவலி பால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட
கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான்,
மருகன் தன் சிற்றடியே. (15)
4. அருள் கிடைக்க...
தடுங்கோள் மனத்தை, விடுங்கோள்
வெகுளியைத், தானமென்றும்
இடுங்கோள், இருந்தபடி
இருங்கோள், எழு பாரும் உய்யக்
கொடும் கோபச் சூருடன், குன்றம்
திறக்கத் தொளைக்க, வைவேல்
விடும்கோன், அருள்வந்து
தானே உமக்கு வெளிப்படுமே.(16)
5. அறிவுரை
கோழிக்கொடியன் அடி
பணியாமல் குவலயத்தே,
வாழக்கருதும் மதியிலிகாள்,
உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி உண்ண
வொட்டாது, உங்கள் அத்தமெல்லாம்,
ஆழப்புதைத்து வைத்தால்,
வருமோ நும் மடிப்பிறகே.(20)
6. உனை மறவேன்
தெய்வத்திருமலை, செங்கோட்டில்
வாழும் செழும்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே
மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால்
இரண்டோட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும்
முன்னே வந்து காத்தருளே.(23)
7. மனமே கேள்!
பாலென்பது மொழி பஞ்சென்பது
பதம் பாவையர் கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ
செந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம்
என்கிலை வெட்சித் தண்டைக்
கால் என்கிலை மனமே
எங்ஙனே முத்தி காண்பதுவே.(30)
8. நல்ல பெருமாள்
முடியாப் பிறவிக் கடலிற்
புகார், முழுதும் கெடுக்கும்
மிடியாற் படியில் விதனப்படார்
வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப்
பொடியாக்கிய பெருமாள்
திருநாமம் புகல்பவரே.(33)
9.முன்னே வருவான்
நாள் என் செயும் வினைதான்
என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும்
கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும், சதங்கையும்
தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு
முன்னே வந்து தோன்றிடினே.(38)
10. வழித்துணை
விழிக்குத்துணை, திருமென்மலர்ப்
பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகாவெனும்
நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை அவன்
பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும்,
செங்கோடன் மயூரமுமே.(70)
40. ஓம் சரவணபவ
முருகப்பெருமானின் பிறப்புக்கு
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில்
தோன்றிய தீப்பொறிகள் கருவாக
அமைந்தது. இதனால் இவர்
'அக்னி கர்ப்பன்' ஆனார்.
அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் 'காங்கேயன்' எனப் பெயர் பெற்றார். சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் 'சரவணபவன்' என அழைக்கப்பட்டார். இதையே நாம் ஆறெழுத்து மந்திரமாக 'ஓம் சரவணபவ' என்கிறோம். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின.
இவற்றை வளர்க்கும் பணியை கார்த்திகைப்பெண்கள் செய்தனர். இதனால் 'கார்த்திகேயன்' என்றும் பெயர் பெற்றார். தனது குழந்தையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்தாள். இதனால் ஆறுமுகமும் ஒன்றாகி 'கந்தன்' ஆனார். கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவர் என பொருள்.

