ADDED : ஜூலை 16, 2026 11:39 AM

ஜூலை 22 - கருட ஜெயந்தி
* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது விசேஷம்.
* கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் மூலவராக உள்ள கல்கருடன் உலா வருகிறார்.
* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கர கருடாழ்வார் இருக்கிறார்.
* நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் காட்டிய நிலையில் காட்சி தருகிறார்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடிஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் மூலைக்கருடனுக்கு தடைகளை போக்க சிதறுகாய் உடைக்கின்றனர்.
* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ரெங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வார் மூவரும் ஒரே இடத்தில் அருள்புரிகின்றனர். இங்கு கருடனின் விசேஷ அந்தஸ்துக்குக் காரணம், பெரியாழ்வாராக அவதரித்து ரெங்கமன்னாரின் மாமனார் ஸ்தானத்தில் இருப்பதே.
* விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் (திருத்தண்கால்) நின்ற நாராயண பெருமாள் கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடன் உள்ளார்.
* திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி என்னும் தலத்தில் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காக கருடனும், கொடி மரமும் சற்று விலகி நின்றது.
* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளில் நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள்(ஒன்பது பெருமாள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி காட்சியளிப்பர்.
* திருப்பதி மலைக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுவாமி புஷ்கரணி என்ற குளத்தைக் கொண்டு வந்தவர் கருடன்.
* திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் உள்ளார்.
* கர்நாடகா மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் பங்குனி ஏகாதசியன்று வைரமுடி சேவை நடக்கிறது. இந்த வைரமுடி(கிரீடம்) கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
