
எம்.சண்முகம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர்: திருமணத்தில் கூரைச்சேலை உடுத்துவது ஏன்?
கூரை என்றால் 'பாதுகாப்பு'. வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக அமைய மணமகளுக்கு கூரைச்சேலை உடுத்துகிறோம்.
லோ.கலாராணி, மேடவாக்கம், சென்னை: வயதாகி விட்ட என்னால் விரதமிருக்க முடியவில்லையே...
விரதநாளில் சைவமாக சாப்பிட்டு (வெங்காயம், பூண்டு சேர்க்காமல்) இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் பலன் கிடைக்கும்.
ஏ.சிவஞானம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: *எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?
16 முதல் 70 வயது வரை விரதம் இருக்கலாம். குழந்தை, முதியவர், கர்ப்பிணி, நோயாளிக்கு விதிவிலக்கு.
ஆர்.ஆவுடைநாயகம், எட்டையபுரம், துாத்துக்குடி: *கடவுளின் பெயரை (முருகா, சிவா, ராமா) பக்தியுடன் சொன்னால்...
எண்ணம், சொல், செயலில் துாய்மை உண்டாகும்.
ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி: வாழை இலை தவிர வேறு இலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா...
மந்தாரை, புரசு, பலா, குங்கிலிய இலைகளை தைத்து பயன்படுத்தலாம்.
எஸ்.ரவி, முருகப்பாக்கம், புதுச்சேரி: காசி யாத்திரை செல்வோர் முதலில் எங்கு செல்ல வேண்டும்?
முதலில் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடல். அதை தொடர்ந்து காசி, கயா தரிசனம். மீண்டும் காசியில் பூஜைகளைச் செய்த பின் அயோத்தியை தரிசிக்கலாம்.
ஆ.விஜயலட்சுமி, செல்வபுரம், கோயம்புத்துார்: அமாவாசையை நல்ல நாள் என்கிறார்களே...
முன்னோர் வழிபாட்டுக்குரிய அமாவாசை அன்று சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது. ஆனால் தற்போது நல்ல நாளாக கருதி சுபவிஷயத்தை பேசி முடிக்கின்றனர்.
ர.அன்னபூரணி, பெங்களூரு: மரண பயமின்றி வாழ...
சரபேஸ்வரர், நரசிம்மர், காளி, பைரவர், வீரபத்திரர், சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.
பா.கார்த்தி, தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி: வீட்டில் பூனை வளர்க்கலாமா?
வளர்க்கலாம். அது குறுக்கும் நெடுக்குமாக போவதை சகுனத்தடையாக கருதக் கூடாது.

