
ஆர்.ஜி.ராகவன், துடியலுார், கோவை.
*அஷ்டமத்துச் சனியா...
ஒருவரின் ராசியில் இருந்து எட்டாம் ராசிக்கு சனி வரும் காலம் அஷ்டமத்துச் சனி. இதற்கு பரிகாரமாக திங்கள் தோறும் சிவனுக்கு விரதமிருப்பதும், சனிப் பிரதோஷத்தன்று நந்தி அபிஷேகம் தரிசிப்பதும் நல்லது.
ஆர்.கே.பிரசாத், வி.கே.புரம், திருநெல்வேலி.
*சாஸ்தாவும் ஐயப்பனும் ஒருவரா...
ஒருவரே. கேரளத்தில் பிரம்மசாரியாகவும், தமிழகத்தில் அவரது மனைவியரான பூரணை, புஷ்கலாவுடன் இருக்கிறார்.
ஆர். ராமஜெயம், பெண்ணாடம், கடலுார்.
*ஆண்டுக்கு எத்தனை முறை வீட்டில் ஹோமம் நடத்தலாம்?
எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். நோயின்றி நீண்ட நாள் வாழவும், செல்வம் பெருகவும் பிறந்த நட்சத்திரத்தன்று ஹோமம் நடத்துங்கள்.
கே.சசிராஜன், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*சண்டித்தனம் செய்யும் குழந்தையை திருத்துவது எப்படி?
இது குழந்தைக்கே உரிய குணம். நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுங்கள். 'டிவி', அலைபேசி, சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிக்காமல் குழந்தைக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.
எஸ்.ராஜி, மயூர்விகார், டில்லி.
*வலம்புரி, இடம்புரி விநாயகர் எப்படியிருப்பார்?
விநாயகரின் தும்பிக்கை வலதுபுறம் இருந்தால் வலம்புரி, இடதுபுறம் இருந்தால் இடம்புரி.
கே.பிரீதி, மாகடி, பெங்களூரு.
*ஐயப்பனின் பெற்றோர் யார்?
பெற்றோர்: மோகினி, சிவபெருமான் வளர்ப்பு பெற்றோர்: பந்தள ராணி, ராஜசேகர பாண்டியன்
எம்.பூரணி, குரோம்பேட்டை, செங்கல்பட்டு.
*அசைவம் சாப்பிட்ட அன்று கோயில் செல்லலாமா...
செல்லக் கூடாது. மீறி சென்றால் பாவம் சேரும்.
சி.ரம்யா, நித்திரவிளை, கன்னியாகுமரி.
*பிறந்த நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்வது நல்லதா...
நட்சத்திரம் வரும் நாளன்று கோயில் வழிபாடு செய்வது, பெற்றோரிடம் ஆசி பெறுவது நல்லது.
எல். கல்யாணி, பிராட்வே, சென்னை.
*வீட்டுவாசலில் சங்கு பதிப்பது ஏன்
திருஷ்டியைப் போக்கவும், நல்ல சக்தியை ஈர்க்கவும், மகாலட்சுமியின் அருளைப் பெறவும் வாசலில் சங்கு பதிக்கின்றனர்.
ஜி.மோகனா, திருச்சுழி, விருதுநகர்.
*விரும்பிய நேரத்தில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லலாமா?
சொல்லலாம். தேவாரப் பாடலில் திருஞான சம்பந்தர், 'துாங்கும் போதும், விழித்திருக்கும் போதும் சிவபெருமானின் மந்திரத்தை உச்சரியுங்கள்' என்கிறார்.