
எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.
*விரதமிருக்கும் தாயாரை திட்டி விட்டேன். பரிகாரம் உண்டா?
தாயாரை வருந்தச் செய்வது பாவம். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள். அதோடு அவர் இருக்கும்வரை பணிவிடை செய்யுங்கள்.
கே.முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.
*உடல் பலத்தை விட மன அடக்கம் சிறந்ததா...
மனக்கட்டுப்பாடுடன் வாழ்வதே வீரம். ஆனால் அனுமன் போல செயல் வீரனாக மாறுவது என்பது அரிய செயல்.
பி.விஜய்பாரதி, ஹலசூரு, பெங்களூரு.
*குபேரனுக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
வெண்கலம் அல்லது தங்கத்தால் ஆன ஏழு விளக்குகள் ஏற்றுவது நல்லது.
ஆர்.வினோதா, சிங்கம்புணரி, சிவகங்கை.
*விநாயகருக்கு சிதறுகாய் உடைக்க கொடுத்ததை, என் மகன் பசியால் வாடும் ஒருவருக்கு கொடுத்து விட்டான். சரிதானா?
பசி போக்க விநாயகரே நேரில் வந்து தங்கள் மகனிடம் பெற்றதாக எண்ணுங்கள்.
கே.வத்சலா, சிதம்பரம், கடலுார்.
*விநாயகர், அனுமனை சனி பிடிக்கவில்லையாமே...
முதல் கடவுளான விநாயகரின் அருள்பலம், அனுமனின் தவபலமே இதற்கு காரணம். இவர்களை வழிபட கிரக தோஷம் நெருங்காது.
ஆர்.மோகனா, துவாரகா, டில்லி.
*அருணோதயம், சூரியோதயம் இரண்டும் ஒன்றா...
இல்லை. சூரியன் உதிக்கும் முன்பாக வானம் சிவந்திருக்கும். அது அருணோதயம். சூரியன் உதிப்பது (கண்ணுக்குத் தெரிவது) சூரியோதயம்.
எம்.கணேஷ், பிராட்வே, சென்னை.
*அமாவாசையன்று குழந்தை பிறந்தால்...
குழந்தை பிறப்பு இயற்கையானது. அதனால் அமாவாசை தோஷம் கிடையாது. பிறப்புக்கும், இறப்புக்கும் ஆதாரமாக இருப்பவர் கடவுள்.
கே.கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.
*குருபக்தியால் நற்கதியடைந்தோர் யார்?.
குருநாதர் - சீடர்கள்
ஆதிசங்கரர் - தோடகாசாரியார்
ராமானுஜர் - கூரத்தாழ்வார்
இவர்களைப் போல இன்னும் பலர்.
கே.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.
*பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் - விளக்கம்.
சன்னதியை வலம் வருவது பிரதட்சிணம். தரையில் உருண்டபடி செல்வது அங்கப்பிரதட்சிணம். இரண்டுமே புண்ணியம் தரும்.
எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு.
*கோள் தீர்த்த விநாயகரின் சன்னதி எங்குள்ளது?
நவக்கிரகத் தலங்களில் ஒன்றான சூரியனார் கோவிலில்(தஞ்சாவூர் மாவட்டம்) உள்ளது.