
ஆடிப்பெருக்கு என்பது நீரோடும், நிலத்தோடும் தொடர்புடைய விழா. அதிலும் காவிரி நதி பாயும் பகுதிகளில் இவ்விழா சிறப்பாக நடக்கும். அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் அவசியம். இதனால் திருவள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' என்கிறார். அதிலும் குடிப்பதற்கு ஏற்ற நீரைத் தருவதில் நதிகளுக்கு பெரும் பங்குண்டு.
தமிழகத்தில் பல நதிகள் இருந்தாலும், காவிரிக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. தமிழ் புலவர்கள் இந்த நதியின் அழகை சொல்லாமல் பாடல்கள் பாடியதில்லை.
வசையில் புகழ்வயங்கு வெண்மீன்,
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா,
மலைத்தலை இய கடற்காவிரி
* வெள்ளி என்னும் நட்சத்திரம் தான் செல்லுவதற்குரிய திசையாகிய வடக்கு செல்லாது தெற்கு நோக்கிச் சென்றாலும்
* வானம்பாடி என்னும் பறவை மழை
துளியாகிய உணவைப் பெறாமல்
வருந்தும்படி பஞ்சகாலம் உண்டானாலும்
குடகு மலையில் தோன்றும் காவிரியாறு
தவறாமல் காலந்தோறும் பெருக்கெடுத்து வரும் என்கிறது பட்டினப்பாலை.
உழவர் ஒதை மதுகு ஒதை; உடைநீர் ஒதை;
தண்பதங்கொள்
நடந்தாய் வாழிகாவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அதுபோர்த்து
கருங்கயற்கண் விழிதொல்கி நடந்தாய் வாழிகாவேரி
பூவார்கோலை மயிலாலப்புரிந்து குயில்களிசைபாடக்
காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழிகாவேரி
பூக்கள் நிறைந்த சோலைகளில் மயில்கள் கூட்டங் கூட்டமாக ஆடவும், குயில் அதற்கேற்ப இசைபாடவும் உள்ள கரைகளை உடையது காவேரி. காவேரியம்மனை புதுநீர்ப்பெருக்கின்போது பெண்கள் துாபதீபங்காட்டி வழிபட்டு வழியனுப்பும்போது இடும் பூமாலைகளை தாங்கிச் செல்லும் காவேரிநதி என சிறப்பிக்கிறது சிலப்பதிகாரம்.

