ADDED : ஜன 12, 2023 12:11 PM

கோயில் என்றால் சிதம்பரத்தை குறிக்கும். அங்கு மூலவரும், உற்ஸவரும் ஒருவரே. சிதம்பரத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவற்றை காண்போமா...
கோயில் - சிவபெருமான் மீது நாயன்மார்கள் பாடிய பன்னிரு திருமுறை பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
பெரும்பற்றப்புலியூர் - புலிக்கால் முனிவர் இங்கு பூஜை செய்ததால் இப்பெயர் வந்தது.
தில்லை - தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லை என்று பெயர். (இம்மரங்கள் தற்போது அருகிலுள்ள பிச்சாவரத்தில் காணப்படுகின்றன)
திருமூலட்டானம் - எல்லா கோயில்களில் அர்த்தஜாம வழிபாடு முடிந்த பின், அக்கோயிலின் ஆற்றல் அனைத்தும் சிதம்பரத்திற்கு வந்து சேரும். அதனால் திருமூலட்டானம் என்பர்.
சிற்றம்பலம் - நடராஜர் நடனமாடும் சபையை 'சித்சபை' என்பர். சித் என்றால் ஞானம். சித்சபையை சிற்றம்பலம் என அழைப்பர். அம்பலம் என்றால் மேடை. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என பெயர் பெற்றது.
பொன்னம்பலம் - பராந்தகசோழன் பொன் வேய்ந்ததால் பொன்னம்பலம் என்பர்.
பூலோக கைலாயம் - பக்தர்கள் இக்கோயிலை 'பூலோக கைலாயம்' என போற்றுவர்.
ஆகாயத்தலம் - பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக உள்ளது.
இருதய தலம் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரம், திருவானைக்காவல் உந்தி, திருவண்ணாமலை மணிபூரகம், திருக்காளத்தி கழுத்து, காசி புருவமத்தி, சிதம்பரம் இருதய தலமாகவும் போற்றப்படுகின்றன.

