ADDED : டிச 29, 2017 09:21 AM

சிவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாதாமே...ஏன்?
இ.நாகராஜன், சாத்துார்
கணவன்- மனைவி, பெற்றோர்- குழந்தை, குரு- சீடன் இவர்களுக்கு இடையில் யாரும் செல்லக்கூடாது. நந்தி சிவனின் சீடர், வாயிற்காவலர், தமது மூச்சுக்காற்றினால் சுவாமிக்கு சாமரம் வீசுபவர். இதனால் குறுக்கே செல்லக்கூடாது.
திருச்செந்துாரில் சுவாமியை தரிசிக்க, சட்டையுடன் அனுமதிப்பதில்லையே ஏன்?
எஸ்.சந்திரஸ்ரீநிவாசன், கீழ்கட்டளை
அங்கு மட்டும் தான் நமது கலாசாரம் பாதுகாக்கப்படுகிறது. ஆண்கள் வேட்டி துண்டுடனும், பெண்கள் புடவையுடனும் கோயிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது மரபு.
* பொய் சத்தியம் செய்த, பாவம் தீர பிராயச்சித்தம் என்ன?
ஆர்.கலைவாணி, சென்னை
ஒரு நல்லது நடக்க அல்லது ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்ற சொல்லப்படும் பொய் பாவமாகாது. 'பொய்மையும் வாய்மையிடத்து' என வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தவறான காரியங்களுக்காக சொல்லப்படும் பொய் பாவமாகும். இதற்கு பிராயச்சித்தம் இல்லை. இதற்கெல்லாம் பாவமன்னிப்பு தந்தால் அது தீயவர்களை ஊக்குவிப்பதாகி விடும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவி செய்தால், ஆறுதல் கிடைக்கும்.
கூட்டுப்பிரார்த்தனை மூலம் உடனடியாக பலன் பெற முடியுமா?
ஏ.டி.எம். கண்ணன், மஞ்சூர்
அவசர உலகத்தில் வாழ்கிறோம் என்பதற்காக, ஆன்மிகமும் உடனடி பலன் தர வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. இதை தவறாக உபயோகித்து மக்களை ஏமாற்றுவதும் இதனால் தான். தேவையைக் கேட்பது நம் கடமை; நிறைவேற்றுவது கடவுளின் உரிமை. எந்தப் பிரார்த்தனையாக இருந்தாலும், காலம் வரும் போது கடவுள் செய்வார்.
* முயற்சி வெற்றிபெற என்ன வழிபாடு செய்யலாம்?
என்.ஜெயன், திருப்பூர்
முயற்சி என்பது ஒரு தவம். வாழ்வில் தோல்விகளால் மனம் சோர்வடையாமல் இருக்க இறைவழிபாடு துணைபுரியும். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அருள் கிடைக்கும்.
