
* மணமான பெண்கள் மெட்டி அணிவது கட்டாயமா?
எஸ். எல். பிச்சைமுத்து, சிங்கப்பெருமாள்கோயில்
கற்புநெறி தவறாமல் வாழ வேண்டும் என உறுதிமொழி எடுக்க, அம்மி மிதித்தல் என்னும் சடங்கை திருமணத்தில் நடத்துவர். இதற்கு முன்பாக மணமகன், மணமகளின் காலில் மெட்டி அணிவிக்க வேண்டும். மங்களத்தின் அடையாளமான மெட்டி அணிந்தால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். சில குடும்பத்தில், மெட்டியை நாத்தனார் அணிவிப்பதும் உண்டு.
நவக்கிரகங்கள் வெவ்வேறு திசை நோக்கியிருப்பது ஏன்?
ஆர்.ஜெயபாரதி, சாத்துார்
கிரகங்கள் ஓரிடத்தில் நிற்காமல் சூரியனை சுற்றுபவை. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு திசை நோக்கியவாறு உள்ளன என இக்கால அறிவியலாளர்கள் சொல்வதை, அக்கால ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் நவக்கிரக சன்னதி உள்ளது.
சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை காகத்திற்கு வைக்கலாமா?
என்.ஜே.கீர்த்தி, திருப்பூர்
முன்னோர் ஆசி பெற காகத்திற்கு உணவிடுகிறோம். சுவாமிக்கு படைத்ததை காகத்திற்கு வைக்க கூடாது. படைக்கும் முன், காகத்திற்கு தனியாக வைப்பது நல்லது.
பூர்ணகும்ப மரியாதையின் நோக்கம் என்ன?
ஆர்.லட்சுமி, மதுரை
பூரணம் என்றால் 'நிறைந்த' என்று பொருள். உயர்ந்த துறவிகள், சான்றோர்கள், அரசர்களுக்கு வழங்கப்படும் கவுரவம் இது. எந்த குறையும் இல்லாமல் முழுமையாக வரவேற்பது இதன் நோக்கம்.
* மாலை நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பது ஏன்?
த.காந்திமதி, பண்ருட்டி
விளக்கேற்றும் மாலை நேரத்தில் மகாலட்சுமி வீட்டிற்கு வருவதால் வழிபாடு செய்ய வேண்டும். அப்போது உண்பது, உறங்குவது நல்லதல்ல.
படுக்கையறையில் சுவாமி படங்கள் இருக்கலாமா?
கோல்டன் தேவதை, குனியமுத்துார்.
வைக்க கூடாது.

