ADDED : ஏப் 17, 2012 01:37 PM

* திருவிழா காலத்தில் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுவது ஏன்?
எம்.வரலட்சுமி, முகப்பேர்
ஒரு கோயிலில் திருவிழா நடக்கிறது என்றால் எல்லா தெய்வங்களுமே அங்கு வந்து செல்வர். கோயிலில் திருவிழா நடக்கிறது என்பதை உணர்த்தவும், எல்லா தெய்வங்களையும் வரவேற்கவும் இப்படிச் செய்யப்படுகிறது.
** மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
எஸ்.விஜயலட்சுமி, மதுரை
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
* வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?
எஸ்.சடையப்பன், திண்டுக்கல்
பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். 'சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்.
பி.பரத், சிதம்பரம்
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?
அ.வனிதா, பழநி
முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.
* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?
மு.சண்முகவேல், அருப்புக்கோட்டை
நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
