தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மே 20, 2014 04:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2014 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வாஸ்து சாஸ்திரப்படி ஒன்றோ அல்லது ஒற்றைப்படையிலோ தென்னை மரம் வீட்டில் இருப்பது கூடாது என்கிறார்களே உண்மையா?

அனுசூயா ரமணி, கோவை

வாஸ்து சாஸ்திரத்தில் தென்னை மரம் பற்றிக் கூட சொல்லியிருக்கிறதா? நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. உங்களிடம் சொன்னவரிடம் இருந்து அந்த புத்தகத்தைப் பெற்றுத் தாருங்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல உதவியாக இருக்கும்.

* மதுரை மீனாட்சி மட்டும் கிளியேந்திய கரத்தோடு இருக்க, காமாட்சி, விசாலாட்சியிடம் கிளி இல்லையே ஏன்?

பெ. அர்ச்சுனன், விழுப்புரம்

வேதங்களின் வடிவாகக் கிளியை கையில் ஏந்தியபடி, வேத நெறிப்பட்ட அரசாட்சியை மதுரை மீனாட்சி நடத்துகிறாள். அதன் அடையாளமாக மீனாட்சி கிளியை வைத்திருக்கிறாள். காமாட்சி, விசாலாட்சி அம்பிகையின் புராண வரலாறு வேறு. அதன்படி, அவர்களின் கோலம் அமைந்திருக்கிறது.

** எல்லாக் கடவுளும் ஒன்று தானே. உள்ளூரில் இருக்கும் கோயிலை விட்டு வெளியூர் சென்று வணங்குவது தேவைதானா?

டி. சரவணன், வில்லிவாக்கம்

புராண அடிப்படையில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வகையில் குறிப்பிட்ட கோயில்களில் குறிப்பிட்ட தெய்வங்கள் சிறப்பு அம்சம் கொண்டதாக விசேஷ சக்தி பெற்றவையாக எழுந்தருளியிருக்கின்றனர். எல்லா சிவன் கோயில்களிலும் அம்மன் சந்நிதி உள்ளது. எனினும் மீனாட்சியம்மன் உலகம் போற்றும் உன்னத தாயாக மதுரையில் வீற்றிருக்கிறாள். காரணம், மதுரையின் புகழ் கூறும் புராணங்களில் மீனாட்சி தனித்தன்மை பெற்றவளாகவும், பாண்டிய ராணியாக அரசாட்சி செய்ததுமேயாகும். எல்லா கோயில்களிலும் நடராஜருக்கு சந்நிதி இருக்கும். ஆனாலும் சிதம்பரம் நடராஜர் சந்நிதியை விசேஷமாக குறிப்பிடுகிறோம். காரணம் அத்தலத்தில் சிவன் உமையவளுக்காக திருநடனம் ஆடியதும், பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களுக்கு காட்சியளித்ததும் சிறப்பானவை. இதுபோன்ற தலங்களில் சிறப்பின் அடிப்படையில் தெய்வ சான்னித்யம் அதிகமாக இருப்பதால் அங்கு சென்று வழிபடுவது தான் நல்லது. அதற்காக உள்ளூர் தெய்வத்தைக் குறைவாக நினைப்பது கூடாது. உள்ளூர் கோயிலில் தினப்படி தரிசனம். சிறப்புத் தலங்களில் ஏறுபடி தரிசனம். எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான், பொழுது விடிந்து பொழுது சாய்கிறது. நம் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி தான். இருந்தாலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இயல்பான வாழ்க்கை முறையை நாமே மாற்றிக் கொள்வது போலத் தான்!

தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்களே. எந்த தெய்வத்திற்கு இதனை மேற்கொள்ளலாம்?

ஆர்.கல்பனா, சிவகங்கை

பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த தீபமேற்றி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி இதைப் பற்றிக் கூறுவதற்கு சாஸ்திர ரீதியாக செய்திகள் எதுவுமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us