
* சில தலங்களில் சிவனும், சில தலங்களில் அம்பிகையும் பிரசித்தமாக இருப்பது ஏன்?
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி
திருத்தலங்களின் வரலாற்றின் அடிப்படையில் இவ்வாறு சில கோவில்கள் பிரசித்தமாக விளங்குகின்றன. மற்றபடி இது சாதாரணமான விஷயமே. எந்த கோவிலாக இருந்தாலும், சுவாமி, அம்மன் இருவருக்குமே சக்தி அதிகம் தான். ஒரே தெய்வம் சிவன், சக்தி என்றெல்லாம் பிரிந்து இருக்கிறது.
* பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?
எஸ்.புருஷோத்தமராஜன், பரமக்குடி
புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழி பட்டால் தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற வைராக்கியமுடன் இந்த வழிபாட்டை பலரும் செய்கின்றனர். இதன் மூலம் விநாயகரின் அருளும், தைரியமும் ஒன்றிணைந்து வெற்றி வாய்ப்பு உண்டாகிறது.
** முதியோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளை எப்படி திருத்தலாம்?
எஸ்.எம். முத்து, சிட்லபாக்கம்
காலத்திற்கேற்ப பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். பழம் பஞ்சாங்கமே பாடிக் கொண்டிருக்க கூடாது. மருமகள் நமது அடிமையல்ல என்று நினைத்து விட்டாலே போதும். அந்தப் பெண்ணால் குடும்பத்தில் பிரச்னை வராது. மருமகளிடம் பிரச்னை செய்ய செய்யத் தான், அவள் கணவரிடம் சொல்லிக் கொடுத்து பெற்றோரை ஒதுக்கச் சொல்வாள். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சில வீடுகளில், பொறுமையான மாமனார், மாமியாரைக் கூட பணம் உள்ளிட்ட காரணங்கள் கருதி ஒதுக்கச் சொல்லும் மருமகள்களும் இருக்கிறார். சூழ்நிலை காரணமாகவே பிள்ளைகள் பெற்றோரை ஒதுக்குகிறார்கள். இருதரப்பும் மனதளவில் திருந்த வேண்டும். பிள்ளைகளை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது.
* இந்த பிறவி முடிந்ததும் நமக்கு மறுபிறவி எப்போது கிடைக்கும்?
எஸ்.கிருஷ்ணராஜ், நீலகிரி
எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இந்த உயிருக்கு இத்தனை பிறவிகள் என்ற நியதிப் படியும், அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையிலும் பிறவி நமக்கு ஏற்படுகிறது. அடுத்த பிறவியில் பூமிக்கு வரும் போது, நம் விருப்பம் போல பிறக்கும் வாய்ப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை.
* வீட்டைச் சுற்றிலும் சாம்பிராணி தூபம் காட்டுவது அவசியமா?
எஸ்.எம்.பிச்சை முத்து, சிங்கப்பெருமாள் கோவில்
அவசியமே. சாம்பிராணி புகை தெய்வ சக்தியை வரவழைக்கும். தீமையை அகற்றும். கண் திருஷ்டி போக்கும். செய்வினை தோஷம் அகலும். இப்படி எத்தனையோ சிறப்பு இருக்கிறது. இதை சுவாசிப்போருக்கு நோய் நொடி நீங்கும். வாரம் ஒருமுறையாவது வீடு
முழுவதும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுவது நல்லது.
சிவன் கோவில் சுவரில் நான்கு பக்கமும் நந்தி சிலை இருப்பது ஏன்?
பா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை
சிற்ப சாஸ்திரப்படி, சிவன் கோவில் சுவரில் நந்தியும், பெருமாள் கோவில் சுவரில் கருடனும், அம்மன் கோவிலில் சிங்கமும் இருக்க வேண்டும். தொலைவில் இருந்து கோவிலைப் பார்க்கும் போது, எந்த தெய்வத்தின் கோவில் என்பதை உணர்த்தும் சின்னமாக இது விளங்குகிறது.

