ADDED : ஜூலை 16, 2026 10:40 AM

கும்பகோணம் அருகிலுள்ள தேப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் சிவன். தன்னுடைய வீடு, நிலத்தை விற்ற பணத்தில் அன்னதானம் செய்து வந்தார். கும்பகோணத்தில் நடந்த மகாமக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கினார். அதன் பின்னர் இவர் நடத்தும் அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு சிவனிடம் அன்பளிப்பு வழங்கினர்.
ஒருமுறை தஞ்சாவூர் பகுதிக்கு யாத்திரையாக வந்தார் காஞ்சி மஹாபெரியவர். பல நாட்களாக பிக்ஷை (உணவு) ஏற்காமல் தியானம், பூஜையில் ஈடுபட்டதால் சுவாமிகள் மெலிந்து காணப்பட்டார். இதை பார்த்து சீடர்களும், பக்தர்களும் மிகவும் வருந்தினர்.
இதை கேள்விப்பட்ட சிவன், கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 'கலியுக தெய்வமான தாங்கள் பல காலம் உடல் நலத்துடன் இருந்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும். அதற்காக தினமும் பிக்ஷை ஏற்பது அவசியம். அசதியால் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெந்நீரில் நீராடுங்கள்.
இரவில் நீண்ட நேரம் விழிக்காதீர்கள். அன்றாட பூஜையை சரியான நேரத்திற்கு முடித்து விடுங்கள். சீடர்கள் இல்லாமல் தனியாக எங்கும் செல்லாதீர்கள்' என மனதிற்கு தோன்றியதை எல்லாம் கடிதத்தில் எழுதினார்.
அதை படித்த மஹாபெரியவர் அருகில் இருந்தவர்களிடம், 'சிவன் சொன்னபடி இனி நடக்கிறேன்' என்றதோடு அவர் நடத்தும் அன்னதானம் நல்ல முறையில் நடக்க ஆசியும் அளித்தார்.
தன்னுடைய இறுதி காலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் தங்கி சிவன் அன்னதானம் செய்தார். அவர் இறந்த போது, 'சன்னியாசம் பெறாமல் பசி தீர்க்கும் புண்ணியச் செயலில் ஈடுபட்டு இந்த பிறவியிலேயே மோட்சம் அடைந்து விட்டார் அன்னதான சிவன்' எனக் காஞ்சி மஹாபெரியவர் சீடர்களிடம் கூறினார்.
மஹாபெரியவரின் ஆசியை பெற நாமும் அன்னதானம் செய்வோம்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
