
புதையல் ரகசியம்
விவசாயி ஒருவர் மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். உழைப்பும், நற்பண்பும் அவரை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் முதுமையால் உடம்பில் தளர்ச்சி ஏற்பட்டது. மகன்கள் பொறுப்பு இல்லாமல் இருப்பதை எண்ணிக் கவலைப்பட்டார். தனக்குப் பிறகு இவர்கள் எப்படி பிழைக்கப் போகிறார்கள் என்ற கவலை ஏற்பட்டது. உழைப்பின் சிறப்பை உணர்த்த விரும்பினார்.
'இவ்வளவு நாளாக நான் உழைத்தேன். இப்போது முதுமையால் என் உடல் தளர்ந்து விட்டது. இனி குடும்ப பாரத்தை நீங்கள் தான் சுமக்க வேண்டும்'' என மூவருக்கும் நிலத்தை பிரித்துக் கொடுத்தார். நிலத்தில் புதையல் இருப்பதாகவும், அதை பயன்படுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி விட்டு உயிர் நீத்தார்.
மகன்கள் இறுதிக்கடன்களைச் செய்தனர். தந்தையின் அறிவுரையால் பொறுப்புடன் நடக்க முடிவு செய்தனர். தந்தை விட்டுச் சென்ற புதையலை எடுப்பதற்காக மூவரும் சேர்ந்து நிலத்தை தோண்ட ஆரம்பித்தனர். அப்போது சிறுவயதில் தந்தை சொன்ன கதையை தம்பிகளுக்கு நினைவுபடுத்தினான் மூத்தமகன்.
ஒரு குடும்பத்தில் தந்தையும், அவரது நான்கு மகன்களும் வாழ்ந்தனர். ஆளுக்கு ஒரு மரக்குச்சியை கொடுத்து ஒவ்வொருவராக உடைக்கச் சொன்னார் தந்தை. அவர்கள் எளிதாக உடைத்தனர். அதன் பின் நிறைய குச்சிகளை சேர்த்துக் கட்டி அதை அப்படியே உடைக்கச் சொன்னார். ஆனால் ஒருவராலும் உடைக்க முடியவில்லை. அப்போது தந்தை, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; ஒருவராலும் உங்களை எதிர்க்க முடியாது. அதனால் ஒற்றுமையாக செயல்படுங்கள்' என அறிவுறுத்தினார். நாமும் அவர்களைப் போல சேர்ந்து செயல்பட வேண்டும்'' என்றான். தம்பிகளும் ஆர்வமுடன் தலையசைத்தனர்.
முதலில் மூத்தமகனின் நிலத்தை தோண்டினார்கள். அவர்கள் எதிர்பார்த்த புதையல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. “தந்தை பொய் சொல்லியிருப்பாரோ?” என்றான் கடைசி மகன். நம் மூவரையும் கூட்டி வைத்து அன்போடு அப்பா அறிவுரை சொன்னாரே... அப்படியுமா உனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. அவர் நாணயமானவர்.
உண்மை மட்டுமே பேசுபவர் என்றான் மூத்தவன் நம்பிக்கையுடன். அதன் பின் மூவரும் புதையலை எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியோடு களத்தில் இறங்கினர். இரண்டாவது மகனின் நிலத்தை தோண்ட ஆரம்பித்தனர். பாவம் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனது நிலத்தை தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளரவில்லை. கடைசி மகனின் நிலத்தை தோண்டினர். அப்போதும் பலன் கிடைக்கவில்லை.
தந்தையார் மீது மூவருக்கும் கோபம் வந்தது. இருந்தாலும் அவர்கள் 'சரி! கஷ்டப்பட்டுத் தோண்டி விட்டோம். இப்போது நிலம் பதமாக இருப்பதால் வீணடிக்க வேண்டாம். எருவிட்டு நிலத்தை பதப்படுத்தி நெல் விதைப்போம்' என்றான் மூத்தவன். விவசாயப் பணியில் மும்முரம் கட்டினார். அது மட்டும் போதுமா? மேலும் பயிர் வளர்வதற்கு இயற்கை உரமும் இட்டனர். மூவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தனர். உழைப்பு வீண் போகுமா? அமோக விளைச்சல் கிடைத்தது. அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது.
சந்தோஷம் தாளாமல் மேலும் கீழும் குதித்தனர். இப்போது தந்தையாரின் பேச்சு பொறி தட்டியது போல கண் எதிரில் வந்தது. உழைப்பால் வரும் பயனைத்தான் புதையல் என தந்தை குறிப்பிட்டார் போலிருக்கிறது என உணர்ந்தனர். 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பது நம் வாழ்வில் உண்மையாகி விட்டதே என்றனர். விளைச்சலில் வந்த புதுநெல்லில் பொங்கலிட்டு குலதெய்வத்திற்கு படைத்தனர். உழைப்பால் கிடைத்த பணமே உண்மையான புதையல்.
-தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com

