ADDED : மே 29, 2025 02:01 PM

கழுதையை விற்பதற்காக தந்தையும் மகனுமாக சந்தைக்குச் சென்றனர். அவர்களைக் கண்ட ஒருவர், ''கழுதையின் மீது யாராவது ஏறிப்போனால் என்ன! ஏன் வெயிலில் இப்படி நடக்கிறீர்கள்?'' என்றார். உடனே சிறுவனை கழுதையின் மீது உட்கார வைத்து தந்தை நடக்க ஆரம்பித்தார். சற்று துாரத்தில் இன்னொருவர், '' வயசில பெரியவரை நடக்க விட்டு, சிறுவன்
சொகுசா ஏறிப் போவது நியாயமா'' எனக் கேட்டார். இதைக் கேட்டு சிறுவன் இறங்கிக் கொண்டான். தந்தை கழுதை மீது உட்கார பயணம் தொடர்ந்தது.
சற்று துாரம் சென்றதும் அவர்களைக் கண்ட பெண் ஒருத்தி, ''சின்னப் பையனை நடக்க விட்டு அப்பா சவாரி செய்வது ரொம்ப அநியாயம்'' என விமர்சித்தாள். உடனே சிறுவனையும் கழுதை மீது ஏற்றிக் கொண்டார். இனி யாரும் தங்களை விமர்சிக்க வாய்ப்பில்லை என நம்பினர். ஆனால் அவர்களைக் கண்ட சாமியார் ஒருவர், '' வாயில்லா ஜீவன் மீது இருவர் சவாரி செய்வது மகாபாவம்'' என்றார்.
''என்னடா உலகம் இது! நாம் என்ன செய்தாலும் பழிக்கிறதே'' என அவர்கள் வருத்தப்பட்டனர்.
இவர்களைப் போல செயல்படக் கூடாது. சுயமாக சிந்தித்து நியாயமாக தோன்றுவதை பின்பற்ற வேண்டும்.
