ADDED : செப் 20, 2024 07:31 AM

எல்லோருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. 'எனக்கு சொத்து வேண்டாம்' என மறுப்பவர் யாரும் இல்லை. ஆனால் எந்த சொத்தும் நிரந்தரம் இல்லை. நிரந்தரமான சொத்து, யாரும் இழந்து போகாத சொத்து, திருட்டுப் போகாத சொத்து ஒன்று உள்ளது என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். அப்படியானால் அது எது?
அழியாத சொத்தை நமக்குத் தருபவர் குருநாதர். இறந்த பின்னும் இந்த சொத்து வருமா என யோசிக்க வேண்டாம். நாம் மீண்டும் பிறக்காமல் தடுக்கும் சொத்து இது. அதாவது மோட்சம் அளிக்கும் இந்த சொத்து கடவுளுடன் சேர்த்து விடும். அப்பேர்ப்பட்ட இந்த சொத்து தான் ஞானம்! அதை அடைய வழிகாட்டுபவர் குருநாதர்.
நாம் தேடும் சொத்து மூலம் கிடைக்கும் சுகம் தற்காலிகமானதே. ஆனால் 'எப்போதும் மகிழ்ச்சி' என்னும் உயர்ந்த நிலையை ஞானத்தால் மட்டுமே அடைய முடியும். அதை தருபவர் குரு மட்டுமே. நம்மை ஞானவான் ஆக்கும் குருநாதர் மீது எவ்வளவு பக்தி செய்தாலும் போதாது.
அதனால்தான் கடவுளிடத்தில் பக்தி வைக்கும் அதே அளவுக்கு குருவிடமும் பக்தி வைக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். கடவுள் மீதுள்ள பக்திக்கு சமமாக குருநாதர் மீது பக்தி கொண்டவன் உயர்ந்த பிறவியாவான். அந்த குருபக்தியே உயர்ந்த ஞானத்தைக் கொடுக்கும். அனுபவித்தால் மட்டுமே இதை உணர முடியும்.
குற்றாலம் போனவர்கள் வர்ணித்துப் பேசுவதை கேட்டிருப்பீர்கள். அங்கு அவர்கள் பெற்ற அனுபவம் நமக்குக் கிடைக்குமா? இல்லையே...
மணிக்கணக்கில் வேண்டாம்... ஆனால் ஐந்து நிமிஷம் அருவியில் நீராடினால் போதும்... அனுபவம், ஆனந்தம் கிடைத்து விடும். குரு அருள்கிற ஞானம் என்பது குற்றால அருவியின் சுகம் போல... அதை அனுபவித்த பின்னர் தற்காலிக சுகம் தரும் சொத்தின் மீது ஆசை வராது. பணத்தின் மூலம் தவறு செய்யும் போது பாவ மூட்டையும் பெரிதாகும். ஆனால் குருநாதர் தரும் 'ஞானம்' என்னும் சொத்து தானும் வளர்ந்து நம்மையும் வளர்க்கும்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்swami1964@gmail.com