
சாதுர் மாஸ்ய விரதத்தின் போது பண்டரிபுரத்தில் ஒருமுறை முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர்.
சுவாமிகளின் வருகையால் அன்றாட பூஜை, பிட்சா வந்தனம், அன்னதானம் என முகாம் களை கட்டியது. சுவாமிகளின் தரிசனம் பெற வேண்டுமானால், சந்திரபாகா நதியை படகில் கடந்தாக வேண்டும். நதியின் ஒருபுறம் பாண்டுரங்கன் கோயில். மறுபுறம் மஹாபெரியவரின் முகாம்.
பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகள் எப்போதும் பரபரப்பாக இருந்தன. வருமானம் பலமடங்கு பெருகியது. வழக்கத்தை விட பக்தர்கள் அதிகமாக வருகிறார்களே... ஏன் எனக் கேட்டார் ஒரு படகோட்டி. காஞ்சிபுரத்தில் இருந்து மஹாபெரியவர் வந்திருப்பதே காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேள்விப்பட்டதும் தானும் அவரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் படகோட்டிக்கு ஏற்பட்டது. படகில் வந்தவர்களுடன் சேர்ந்து அவரும் முகாமிற்கு வந்தார். அவரிடம், 'அந்த குகன் நீ தானா?' என சிரித்தபடி கேட்டார் சுவாமிகள். அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. ராமாயணம் பற்றி சொல்லியதோடு ராமர் மீது அன்பு கொண்டிருந்த படகோட்டி குகனையும், அவனைத் தன் சகோதரனாக ராமர் ஏற்றதையும் பற்றி விளக்கினார். மனம் நெகிழ்ந்த படகோட்டி பிரசாதம் பெற்ற போது, 'என்னுடைய படகில் ஏறி பாண்டுரங்கன் கோயிலுக்கு தாங்கள் ஒருமுறை வர வேண்டும்' என சுவாமிகளிடம் வேண்டுகோள் வைத்தார்.
அவரின் அன்பை ஏற்று, 'சாதுர்மாஸ்ய விரதம் முடிந்ததும் வருகிறேன்' என்றார் சுவாமிகள். அதன்படியே பாண்டுரங்கன் கோயிலுக்கு செல்வதற்காகச் சீடர்களிடம் சொல்லி அனுப்பினார். படகைச் சுத்தம் செய்து தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்ததோடு, சுவாமிகள் உட்காரும் இடத்தில் கோலமிட்டு வரவேற்பு அளித்தார் படகோட்டி. தெய்வாம்சத்துடன் உட்கார்ந்த மஹாபெரியவரும் மகிழ்ச்சியுடன் பாண்டுரங்கன் கோயிலுக்கு பயணித்தார். அப்போது அந்த குகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தியற்றவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் அவதரித்தால் தாமதமாகும் என பக்தனுக்காக துாணில் அவதரித்தவனே. லட்சுமிநரசிம்மனே உம்மை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

