
ஒருமுறை தீர்த்த யாத்திரை சென்று கொண்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். ஒரு கிராமத்தின் வழியாக சென்ற போது, சுவாமிகளை வரவேற்க மக்கள் தங்களின் வீட்டு வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி வைத்தனர். அதை பார்த்து மகிழ்ந்த காஞ்சி மஹாபெரியவர், ஒவ்வொரு வீட்டினருக்கும் ஆசியளிக்க தீர்மானித்தார்.
ஒவ்வொரு வீட்டினரும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்களை அவருக்கு காணிக்கையாக கொடுத்தனர். அங்கு குடிசை வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டிற்கு சுவாமிகள் போய் விடக் கூடாது என சிலர் தடுக்க முயன்றனர். காரணம் காணிக்கை தர அவர்களிடம் ஏதும் இல்லை என்பது தான்...
ஆனால் பக்திக்கு அன்பு தானே முக்கியம்! அந்த குடிசைக்கும் சென்றார் மஹாபெரியவர். தங்களைத் தேடி மஹாபெரியவர் வந்திருக்கிறாரே என மகிழ்ந்த குடிசைவாசி, 'என்ன புண்ணியம் செய்தோமோ, சாமீ நீங்க... எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க... கொடுக்க என்னிடம் ஏதும் இல்லாவிட்டாலும், எங்கம்மா சேர்த்து வைத்த பழைய செல்லாத காசுகள் உண்டியலில் இருக்கு. அந்த உண்டியலைக் காணிக்கையாக தருகிறேன்... பெரிய மனசு பண்ணி ஏத்துக்கணும்' என அழுதார்.
சுவாமிகளின் பாதத்தில் வைத்து விட்டு வணங்கினார். புன்னகைத்த சுவாமிகள் காசை கையில் எடுத்து, 'இது செல்லாத காசு இல்லே... வெள்ளைக்காரன் காலத்து அசல் வெள்ளிக்காசு. இந்த ஊரிலேயே நீ தான் அதிக காணிக்கை கொடுத்திருக்கிறாய்' என ஆசியளித்தார். மகிழ்ச்சி அடைந்த பக்தர் மீண்டும் காலில் விழுந்தார். குடிசைக்குள் போகக் கூடாது என சுவாமிகளைத் தடுக்க முயன்றவர்கள் வாயடைத்து நின்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.
* தெற்கு,மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

