
எந்த விஷயத்தையும் புரியும்படி சொல்வதில் வல்லவர் காஞ்சி மஹாபெரியவர்.
'சந்தியாவந்தனம் உள்ளிட்ட அன்றாட கடமையை நான் செய்வதில்லை. ஆனாலும் நன்றாக இருக்கிறேன். சந்தியாவந்தனம் செய்வது அவசியமா' எனக் கேட்டார் ஒருவர்.
அதற்கு சுவாமிகள், ''சைக்கிள் ஓட்டுவது ஒரு கலை. சிலர் சைக்கிளை தொடர்ந்து மிதித்துக் கொண்டே செல்வர். சிலர் தொடர்ந்து மிதித்து அதன் வேகத்தில் சைக்கிளை ஓட விட்டு காலுக்கு சற்று ஓய்வு கொடுத்தபடியே, ேஹண்ட்பாரை மட்டும் பிடித்திருப்பர். பெடல் செய்யவில்லை என்பதற்காக அந்த சைக்கிள் நின்று விடாது. அதைப் போலத்தான் கடமையும்.
உங்களின் முன்னோர் அன்றாட கடமையை சரியாக செய்துள்ளனர். அதாவது சைக்கிளை தொடர்ந்து பெடல் செய்துள்ளனர். அந்த பலனால் தான் நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள். பெடலின் வேகம் குறையும் போது எந்த நேரத்திலும் சைக்கிள் நிற்கும். அது போலத் தான் நீங்களும். அன்றாட கடமைகளை தொடர்ந்தால் அதாவது மீண்டும் பெடல் செய்தால் தடையின்றி ஓடும் சைக்கிளைப் போல உங்களின் வாழ்வும், அடுத்த தலைமுறையினரின் வாழ்வும் தொடரும். அதனால் அன்றாட கடமையைச் செய்வது அவசியம்.
முன்பு அதிகாலையில் எழுந்து ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் செய்வார்கள். அதனால் ஆத்மா துாய்மை பெறுவதோடு பிரபஞ்ச சக்தியும் அவர்களை வந்தடையும். இப்போது சூரியன் உதித்த பின் படுக்கையை விட்டு நாம் எழுகிறோம். அன்றாட கடமைகளைச் செய்வதில்லை. மாறாக தவறான சிந்தனைகளில் மூழ்கி, தவறான செயல்களில் ஈடுபடுகிறோம். அதனால் தெய்வீக சக்தியை நம்மால் பெற முடியவில்லை.
சிறப்பாக வாழ விரும்பினால், அன்றாட கடமையைச் செய்யுங்கள். தர்ம சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றுங்கள். முன்னோரின் ஆசி, கடவுளின் அருள் தொடர்ந்து கிடைக்கும். அந்த தொடர்பு அறுந்து விடாமல் காப்பது நம் கடமை. அந்த கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்'' என விளக்கம் அளித்தார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யாதே.
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

