தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா - 10

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 10

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 10


ADDED : ஆக 22, 2024 01:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவாபுரி

தந்தை யுகனும், மகன் அமுதனும் ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“ரொம்ப நேரமா விளையாடிட்டு இருக்கீங்க. இன்னுமா முடியல?” என்றார் பாட்டி.

“இந்த விளையாட்டுக்கு பொறுமை அவசியம். கணக்கு போட்டு காய் நகர்த்தணும். அதனால தான் நேரமாகுது. இதோ அமுதனோட இந்த ராஜாவை வீழ்த்திட்டா ஆட்டம் முடிஞ்சுரும்''

என்றான் யுகன்.

“ஏங்க... அமுதன் சின்ன குழந்தை தானே, உங்க வயசென்ன, அவன் வயசென்ன... விட்டுக் கொடுத்துப் போகக்கூடாதா?” என யுகனை முறைத்தாள் மனைவி தேவந்தி.

இப்போது பாட்டி உள்ளே வந்தார். ''இல்ல தேவந்தி, இந்த நினைப்பு தப்பு. நாம இப்படி பழக்கிட்டா வெற்றி தோல்வியை சமமா எடுத்துக்கிட்டு போற பண்பு குழந்தைகளிடம் குறைஞ்சிடும். அது அவங்களோட மனநிலையை பாதிக்கும். அவங்க போக்குல விடணும். அப்பதான் பெயர் சொல்லும் பிள்ளைகளா வருவாங்க. ராமரின் குழந்தைகளான லவனும் குசனும் கூட இப்படி பெரியவங்க சின்னவங்கன்ற பயம் இல்லாம அவரையே எதிர்த்து நின்னவங்க தான்.”

“பாட்டி, நீ என்ன சொல்ல வர்ற? தலையும் புரியல வாலும் புரியல. இப்படி குழப்புறியே'' என தலையை சொரிந்தான் யுகன்.

“டேய் யுகா, நீ தானே கேட்ட... சென்னைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற முருகன் கோயில் பற்றி” என கொக்கி போட்டுக் கொண்டே வந்தார் பாட்டி.

“ஆமாம் கேட்டேன். இங்க லவகுசன் எங்க வந்தாங்க? முருகரும், ராமரும் சேர்ந்து உன்னை குழப்பிட்டாங்களா?”

“நீ தான் ரொம்ப நேரமா விளையாடி குழம்பி போயிருக்க. அதை விட்டுட்டு நான் சொல்வதைக் கேள்” என்றாள் பாட்டி. அதைக் கேட்ட தேவந்தி சிரித்தாள்.

“சரி பாட்டி, ஆனது ஆச்சு நீ சொல்லு, அப்புறமா விளையாடுறோம்”

“யுகா... திருவள்ளூர் மாவட்டத்துல சிறுவாபுரி முருகன் கோயில் இருக்கு. இந்த இடத்தை சின்னமேடுன்னு சொல்வாங்க''

“இந்த முருகன் கோயிலில் எப்படி லவனும் குசனும் வந்தாங்க?”

“அதுதான் இந்த கோயிலோட வரலாறே. உனக்கு தான் ராமாயணம் தெரியுமே... ராவண வதம் முடிந்ததும் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார் ராமர். யாகப் பசுவாக குதிரையை ஏவி விட, அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்றது. அதை அங்கிருந்த ராமனின் மகன்களான லவனும் குசனும் கட்டி வைத்தனர். இதை அறிந்து குதிரையை மீட்கப் போன லட்சுமணன் வந்தும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை. கடைசியில் ராமர் போரிட நேர்ந்தது. இப்படி சிறுவர்களான லவன், குசன் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி. அதாவது சிறார் வார் புரி. அதுதான் சிறுவாபுரி என்றானது”

“ஓகோ... இந்த கோயிலுக்கு இதுதான் பின்னணியா?”

“ஏன்டா... சென்னையில இருக்க... சிறுவாபுரி தெரியலைன்னு சொல்றியே. நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல இருக்காரே தமிழ்ச்செல்வன், அவர் ஆறு செவ்வாய் சிறுவாபுரிக்கு போய் தான், இடம் வாங்கறதுல இருந்த தடை விலகியதாகச் சொன்னாரே”

“பாட்டி, இந்த அப்பார்ட்மெண்ட்ல பாதி பேர் உன் ரசிகர் ஆயிட்டாங்க. எல்லாரையும் உன் பக்கம் இழுத்துடுவ போலிருக்கு. ஆனா பாட்டி, அந்த தமிழ்ச்செல்வன் என்கிட்ட அளந்து பேசுவார். உன்கிட்ட மட்டும் எல்லாத்தையும் சொன்னாரா?”

“அதுக்கு எல்லாம் ஒரு முகராசி வேணும்டா”

“சரி சரி ரொம்ப கெத்து காட்டாதே”

“சிறுவாபுரியோட நுழைவாயில்லையே சப்த கன்னியர் கோயில் இருக்கும். நடு நாயகமா அகத்தீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், பெருமாள் கோயிலுக்கு பின்புறம் விஷ்ணு துர்கை கோயில் அப்படின்னு வரிசையா இருக்கும். வடக்கு பக்கம் வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கம்பீரமா காட்சி தரும். இங்குள்ள விக்ரகங்கள்ல பாலசுப்பிரமணியர் தான் ஆதி மூலவர். நவகிரகம் தவிர மற்றவை எல்லாம் மரகதச் சிலைகள். கொடிமரம் முன்புள்ள பச்சை மரகத மயில் கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறப்பை எங்கும் காண முடியாது”

“ஆமா அந்த தமிழ்ச்செல்வன் எப்ப போனாரு”

“அவர் போனதுனால உனக்கு ஆசை வந்துருச்சா... சொல்றேன். முதல்ல முருகனின் சிறப்பை கேளு, சிறுவாபுரி முருகன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தியபடி பிரம்ம சாஸ்தா கோலத்துல இருக்கார். முருகன் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் இது. இவரை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம். வாஸ்து தோஷம் நீங்கும். வீடு கட்டுவதில், வாங்குவதில் தடை விலகும். இங்கு முருகர் மணக்கோலத்தில் காட்சி தருவதால் திருமண தடை நீங்கும். மனை, நிலம் சம்பந்தமான கோரிக்கை நிறைவேறும். குழந்தைப்பேறு கிடைக்கும். கடன் தீரும். அருணகிரிநாதரே சிறுவாபுரிக்கு பலமுறை வந்திருக்கிறார்னா பார்த்துக்கோயேன்.”

“பாட்டி யார் இந்த அருணகிரிநாதர்?” அமுதன் ஆர்வமாய் கேட்டான்.

”நல்லா கேட்ட போ! நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் அமுதா. உனக்காக மறுபடியும் சொல்றேன் கேளு.”

“15ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். புகழ்பெற்ற முருக பக்தர். இலக்கியத்தில் ஆயிரக்கணக்கில் பாடல்களை பாடியவர். இவற்றில் 1307 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. சிறுவாபுரி முருகன் மீது எட்டு திருப்புகழ் பாடியிருக்கார். இதில் ஒன்று அர்ச்சனை திருப்புகழ் வகையைச் சேர்ந்தது. சீதள வாரிச பாதா நமோ நம எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது.”

இமை கொட்டாமல் பாட்டி பாடியதை ஆர்வமுடன் கேட்டான் அமுதன்.

வள்ளியை திருமணம் செய்த முருகன் தன்னுடைய இருப்பிடத்துக்கு போய்க் கொண்டிருந்தார். முருகனுக்கு எப்போதும் சோலைகள் நிறைந்த இடம் பிடிக்கும். ராமனை பிரிந்த சீதை அதே வனப்பகுதியில் லவகுசாவுடன் தங்கியிருந்தாள். அந்த இடத்திற்கு வள்ளியுடன் வந்தார் முருகன்.

ஒரு வகையில் பார்த்தால் மகாவிஷ்ணுவின் மகள் வள்ளி. தன் மகளை பார்க்க மகாவிஷ்ணுவும், தன் மகனை பார்க்கவும் சிவனும் இங்கு வந்தனர். அதனால் இங்கு முருகன், சிவன், பெருமாள் கோயில்கள் உண்டாயின.”

“ சரி பாட்டி, சிறுவாபுரிக்கு போகலாம்”

“செவ்வாயன்று தரிசிப்பது சிறப்பு. அதிகாலை 5:00 மணிக்கு நடை திறப்பாங்க. ஆனால் உனக்கு தான் லீவு இல்லையே. நாம ஞாயிறன்று போகலாம். அன்று காலை ஆறு மணிக்கு திறப்பாங்க”

“சரி அடுத்த வாரம் எந்த ஊரு பாட்டி''

“நீ வாழ்ந்துட்டு இருக்குற ஊரோட முதல் பாதி இந்த ஊரோட பேரிலும் உண்டு. கண்டுபிடி பார்ப்போம்”

'திரு திரு' வென விழித்தனர் யுகனும் தேவந்தியும்.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us