
டில்லியில் பணிபுரியும் அரசு அதிகாரி சந்தானராமன். பல ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி மடத்திற்கு வந்தார். தன்னை சுவாமிகளிடம் அறிமுகம் செய்தார். அமைதியாக கேட்ட மஹாபெரியவர், 'நவநீத சோரன் தானே நீ?' எனக் கேட்டார். இதைக் கேட்டு பிரமித்தார் சந்தானராமன்.
காரணம் நவநீதசோரன் என்பது பகவான் கிருஷ்ணரின் பெயர்.'நவநீதம்' என்றால் வெண்ணெய். 'சோரன்' என்றால் திருடன். கோபியரின் வீடுகளில் யாருக்கும் தெரியாமல் உறியில் உள்ள வெண்ணெய்யை திருடித் தின்றதால், கிருஷ்ணருக்கு இப்பெயர் வந்தது.
சரி, சந்தானராமனுக்கு ஏன் இப்பெயர் வந்தது?
அந்தப் பெயரை சந்தானராமனுக்கு வைத்ததே சுவாமிகள் தான்! அவருக்குத் தெரியாமல் போகுமா?
வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்தான ராமன். அவருக்கு கூடப் பிறந்தவர் யாருமில்லை. அதனால் செல்லமாக வளர்ந்தார். அது மட்டுமல்ல. வெளியில் சாப்பிடக் கூடாது என பெற்றோரின் உத்தரவு. வயது ஏற ஏற குழந்தை அப்படியே இருப்பானா? நண்பர்களுடன் செல்லும் போது ஓட்டலில் சாப்பிட வேண்டும் என விரும்புவது இயல்பு தானே! இதற்காக தந்தைக்கு தெரியாமல் அவரது பணத்தை அவ்வப்போது எடுக்க ஆரம்பித்தார்.
திருட வேண்டும் என்பது நோக்கம் அல்ல; ருசியாக உண்ண வேண்டும் என்ற எண்ணம். ஒரு நாள் சிறுவன் சந்தானராமன் பணம் எடுப்பதைக் கண்ட தந்தை அதிர்ச்சி அடைந்தார். மகனின் செயலால் வேதனை அடைந்த அவர், காஞ்சி மடத்திற்கு மகனுடன் சென்றார். மஹாபெரியவரிடம் நடந்ததைச் சொல்லி வருந்தினார்.
சுவாமிகளும் சிரித்தபடி, 'பகவான் கிருஷ்ணனும் சிறுவனாக இருந்த போது தயிர், வெண்ணெய் எல்லாம் திருடி இருக்கான். அது போல் இவனும் நவநீத சோரனாகி விட்டான் போலிருக்கு. கவலைப்படாதே... குழந்தையைக் கொஞ்சம் விட்டுப்பிடி. வருங்காலத்தில் நல்லபடியா இருப்பான். நடப்பதெல்லாம் நன்மைக்கே' என வாழ்த்தி அனுப்பினார்.
காலங்கள் கடந்தன. மஹாபெரியவர் சொன்னது பலித்தது. சந்தானராமன் அரசு அதிகாரியாக பணியாற்றினார். மஹாபெரியவர் சொன்னதை கேட்டு தான் இப்படித்தான் இருந்தோமா என நினைத்து ஆச்சரியப்பட்டார் சந்தானராமன்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

