ADDED : மே 15, 2025 08:41 AM

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே இரணியகசிபுக்கு ஆகாது. அவரை எதிரியாக கருதியவன் அவன். அவனது மகன் பிரகலாதனோ கருவிலேயே திருமாலின் பெருமைகளை கேட்டு வளர்ந்தவன். எப்போதும் நாராயண நாமத்தை ஜபித்தவன். மகன் என்றும் பார்க்காமல் தொடர்ந்து தண்டனைக்கு ஆளாக்கினான். பாலில் விஷம் கலந்து குடிக்கச் செய்தான். ஆனால் பாதிப்பு இல்லை. யானையைக் கொண்டு மிதிக்கச் செய்தான். ஆனால் அது மிதிக்காமல் ஓடியது. மலையில் இருந்து உருட்டிய போது பூமாதேவி தாங்கினாள். கடலில் வீசி எறிந்த போது அலைமகள் காத்தருளினாள்.
இப்படி ஆபத்தில் எல்லாம் காக்கப்பட்டான் பிரகலாதன். அவனிடம், ' உன் பலம் எது?' என கேட்ட போது, 'நாராயணனே பலம்' என்றான். அந்த நாராயணனே துாணில் இருந்து நரசிம்மமாக அவதரித்து இரணியனைக் கொன்றான். இதைப் போலவே கலியுகத்திலும் அடியவர் ஒருவரின் வாழ்வில் அதிசயங்கள் நடந்தன.
சைவ சமயத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். பெற்றோரை இழந்த அவரை அக்கா திலகவதி வளர்த்து ஆளாக்கினார். இளைஞரான பிறகு சமண சமயத்தில் பற்று எற்பட்டது. அவர்களின் மடத்தின் தலைவராக பணியாற்றினார். திலகவதியார் இதை விரும்பவில்லை. தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என சிவனிடம் முறையிட்டாள். சூலை நோயை (வயிற்றுவலி) கொடுத்து ஆட்கொண்டார். திருநீற்றின் மகிமையால் நோய் மறைந்தது. திருநாவுக்கரசர் தேவாரம் பாடி மீண்டும் சைவத்தில் இணைந்தார்.
இதை விரும்பாத சமணர்கள், மன்னர் மகேந்திரவர்ம பல்லவனைத் துாண்டி விட்டு திருநாவுக்கரசரை துன்பப்படுத்தினர். பிரகலாதன் பட்ட கஷ்டத்தை எல்லாம் கலியுகத்தில் வாழ்ந்த நாவுக்கரசரும் அனுபவித்தார். விஷம் தரப்பட்டது. யானையை மிதிக்கச் செய்தனர். சுண்ணாம்பு காளவாசலில் அடைத்தனர். கல்லைக் கட்டி கடலில் தள்ளினர். அங்கே துன்பப்படுத்தியது தந்தை; இங்கே சமணர்கள். அங்கே மகாவிஷ்ணு; இங்கே சிவபெருமான். இருவருமே கடவுள் அருளால் உயிர் பிழைத்தனர். மனத்துாய்மை கொண்ட நல்லவர்களை கடவுள் கைவிடுவதில்லை.
-லட்சுமி பாலசுப்ரமணியம்