தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு


ADDED : ஜூன் 19, 2025 03:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 03:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்வை இழந்த பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். இனிமையாகப் பாடும் அவனுக்கு பலர் காசு, உணவு கொடுப்பது வழக்கம். அடுத்த தெருவில் இன்னொரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். இருவரும் நண்பர்கள்.

ஒருநாள் அவனது பாட்டைக் கேட்ட அரசர், ''அருமையாக பாடுகிறாய். உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன்'' என்றார்.

'' அரசராகிய தாங்கள் சாப்பிடும் உணவை ஒரு நாளாவது சாப்பிட ஆசைப்படுகிறேன்'' எனக் கேட்டான்.

''இதென்ன பிரமாதம். நாளையே உணவுடன் வருகிறேன்'' என்று புறப்பட்டார் அரசர். அடுத்த நாள் அரசரின் வருகைக்காக காத்திருந்தான். வழக்கம் போல் பலரும் உணவு கொடுக்க முன்வந்த போதும் அவன் சாப்பிடாமல் பசியோடு காத்திருந்தான். ஆனால் இரவில் அங்கு வந்த அரசர், ''உணவு நன்றாக இருந்ததா? எங்கே பொற்காசுகள்?'' எனக் கேட்டார்.

''பசியோடு இருக்கிறேன். இப்போதுதானே வருகிறீர்கள்'' என்றான் சோகமாக.

சற்று யோசித்த அரசர், ''உன்னைக் காண கிளம்பிய போது திடீரென எனக்கு தலை சுற்றியது. வைத்தியர்கள் சோதித்து விட்டு ஓய்வெடுக்கச் சொன்னதால் என் பாதுகாவலன் மூலம் உணவு அனுப்பினேன். சாப்பிடவில்லையா? என அருகில் நின்ற பாதுகாவலனை விசாரித்தார்.

''அரசே! உணவை கொடுத்த போது இவர் ஏற்கவில்லை. அதை யாரிடமாவது கொடுத்தால் சாப்பிடுவார்களே என அடுத்த தெருவிலுள்ள பிச்சைக்காரன் ஒருவனிடம் கொடுத்துவிட்டு திரும்பினேன். உங்களிடம் தெரிவிக்க வந்தேன். ஆனால் நீங்கள் ஓய்வில் இருந்தீர்கள்'' என்றான் பாதுகாவலன்.

கன்னத்தில் கைவைத்தபடி யோசித்தார் அரசர். அப்போது அங்கு வந்த அமைச்சர், ''நடந்ததை என்னால் யூகிக்க முடிகிறது. நானே வந்து கொடுக்கிறேன் என அரசர் சொன்னது அவரது பெருந்தன்மை. ஆனால் அவர் நேரில் கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவேன் என மறுத்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். இது மட்டுமே உனக்குத் தெரியும். மேலும் பல விஷயம் நடந்துள்ளது'' என்று சொல்ல அந்த இடமே அமைதியானது.

மீண்டும் அமைச்சர் சொல்லத் தொடங்கினார்.

''இரண்டாவது பாதுகாவலன் மூலம் பொற்காசுகளை அனுப்பினார் அரசர். 'அரச உணவை சாப்பிடுபவனிடம் இந்த பொற்காசை கொடு' என சொல்லி அனுப்பினார். அவனோ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த உன் நண்பனிடம் பொற்காசுகளைக் கொடுத்துச் சென்றான். அந்த பொற்காசும் உனக்காகவே கொடுக்கப்பட்டது. இப்போது அவன் செல்வந்தனாகி விட்டான். புரிதலில் ஏற்பட்ட சிக்கலால் நீ பசியோடு இருக்கிறாய். இதை விதி என்பதா? அல்லது கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டாய் என்பதா? ஒன்று மட்டும் நிச்சயம்... பெற்ற வரம் உனக்கு சாபமாகவும், அவனுக்கு வரமாகவும் மாறி விட்டது'' என்றார்.

அமைதியாக இருந்த அரசர், ''கவலைப்படாதே! நாளை உனக்கு அனுப்பி வைக்கிறேன்'' எனச் சொல்லி புறப்பட்டார். மறுநாள் அரசரின் வருகைக்காக பிச்சைக்காரன் காத்திருந்தான். ஆனால் அவர் வரவேயில்லை. உடல்நிலை சரியில்லாமல் போன அரசர் இறந்து விட்ட செய்தி இன்னமும் பிச்சைக்காரனுக்கு எட்டவில்லை.

வாய்ப்பு என்பது சொல்லிவிட்டு வந்து நம் கதவை தட்டுவதில்லை. பொன்னான வாய்ப்பு கதவைத் தட்டும் போது காதை பொத்திக் கொண்டால் பலன் எப்படி கிடைக்கும். சரியாக பயன்படுத்தும் இன்னொருவரை நாடிச் செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us