
ரங்கநாத கோஸ்வாமி என்னும் மகான் ஒருவர் இருந்தார். வீரசிவாஜியின் குருநாதரான சமர்த்த ராமதாசர் தான் இந்த கோஸ்வாமிக்கும் குருநாதர்.
துறவியாக இருந்தாலும் கோஸ்வாமி பல்லக்கில் தான் செல்வார். அவர் செல்லும் போது கொடி, சாமரம், குதிரை, தீவட்டி பல்லக்கின் முன் செல்லும். இவர் தங்குமிடத்தில் வரும் பக்தர்களுக்கு வயிறார உணவு அளிக்கப்படும். இவருக்கு சமமான மற்ற துறவிகள் சாதாரண நிலையில் இருக்க, இவர் மட்டும் ஆடம்பரமாக இருப்பதைக் கண்டு அவர்கள் சும்மா இருப்பார்களா?
சமர்த்த ராமதாசரிடம் சென்று, ''கோஸ்வாமிக்கு ஏன் இந்த ஆடம்பரம்'' என பொறாமையால் கேட்டனர். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மறுநாள் கோஸ்வாமியிடம் நேரில் சென்று, ''ஆடம்பரத்தை கைவிடு'' எனக் கட்டளையிட்டார்.
''தங்களின் கட்டளை என் பாக்கியம்'' என்றார் மகிழ்ச்சியுடன்.
பரிவாரங்களை அனுப்பி விட்டு… மரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்தார்.
பொறாமை கொண்டவர்கள் மகிழ்ந்தனர். நினைத்தது நிறைவேறியது என்றாலும் அதை அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. குருநாதரின் மூலம் புத்தி புகட்டியதாக தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.
கோஸ்வாமி சில நாட்கள் பிட்சை எடுத்து உண்பார். மற்ற நாட்களில் பட்டினி கிடப்பார். அப்படியும் அவரது முகத்தில் இருந்த மலர்ச்சி குறையவில்லை.
ஒருநாள் சத்ரபதி சிவாஜி காட்டு வழியே குதிரையில் வந்தார்.
ஆஹா! மரத்தடியில் அமர்ந்திருப்பது யார் என உற்றுப் பார்த்தார் கோஸ்வாமி... வியப்புடன் குதிரையை விட்டு இறங்கினார்.
அவரது எளிமை அதிர்ச்சி அளித்தது. அவர் சிரமத்துடன் இருப்பது சரியல்ல எனக் கருதி பணியாட்களை அழைத்து, பக்கத்தில் உள்ள ஊர்களுக்குச் சென்று தக்க ஏற்பாடு செய்ய கட்டளையிட்டார். அந்த ஊரில் இருந்து வேலையாட்கள் பலர் வந்தனர். கோஸ்வாமி இருந்த இடத்தில் பந்தல் அமைத்து தோரணம் கட்டினர். வாழை மரங்களை நாலாபுறத்திலும் கட்டினர். கரடுமுரடாகக் இருந்த பாதையை சீர்படுத்தினர். இந்த ஏற்பாடுகளை கோஸ்வாமி ஏற்க மறுத்தார். மன்னரின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேருமே என்ற பயந்தனர். அதனால் அரைமனதாக கோஸ்வாமி சம்மதித்தார்.
ஆசனத்தில் வற்புறுத்தி அமரச் செய்தனர். முன்பு போலவே ஓரிடத்தில் அடுப்புகள் அமைக்கப்பட்டு சமையல் தொடங்கியது. பக்தர்களுக்கு உணவு தரப்பட்டது. மன்னர் சிவாஜி பணியாளர்களை அனுப்பி கொடி, சாமரம், குதிரை, கொம்பு, பல்லக்கு வசதிக்கு ஏற்பாடு செய்தார்.
மீண்டும் ஒருநாள் வீர சிவாஜி அங்கு வந்தார். ''சுவாமி! தாங்கள் இப்படி இருப்பது தான் அழகு; இந்த வசதிகள் தொடரட்டும்” என சொல்லி விட்டுப் புறப்பட்டார். சில நாட்கள் கடந்தன. குருநாதரான சமர்த்த ராமதாசர் அந்த வழியாக வந்தார். குருநாதரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று விருந்தளித்தார்.
“நீ எப்போதும் இவ்வாறே இருக்க வேண்டும்” எனக் கட்டளையிட்ட சமர்த்த ராமதாசர், மற்றவர்களிடம், ''கவனித்தீர்களா? இது போன்ற ஆடம்பரங்களை வேண்டுமென இவன் தேடவில்லை. நான் கட்டளையிட்டதும் ஏற்றுக் கொண்டான். ஆனாலும் அவனைத் தேடி வந்து விட்டது. இது தான் 'பிராப்தம்'. முற்பிறவியில் கொடுத்து வைத்தவன் அவன். நன்மையோ, தீமையோ முன்வினைப்பயனை மனிதன் அனுபவித்தாக வேண்டும்” என்றார். தவறை உணர்ந்த மற்ற சீடர்கள் குருநாதரிடம் மன்னிப்பு கேட்டனர்.