
கண்ணனைக் காதலித்த பெண்களில் ராதையை உயர்வாகப் போற்றுகிறோம். ஆனால் ராதாவையும் மிஞ்சும் விதத்தில் கண்ணன் மீது அன்பு செலுத்தியவள் துளசி. கோகுலத்தில் கண்ணன் வசித்த போது துளசி அவனை அடைந்தே தீருவேன் என பிடிவாதம் செய்தாள். பெற்றவர்களுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
“கண்ணே... கண்ணனை அடைவது எளிதான செயலா? அவன் இப்போது தானே ராதையை மணம் முடித்துள்ளான். அவள் நம் உறவுக்காரி அல்லவா? நீயும் அவனையே மணக்க எண்ணினால் ராதையின் சாபத்திற்கு ஆளாவாயே” எனவருந்தினர்.
பெற்றோரின் அறிவுரை கண்ணன் மீது வைத்த கண் மூடித்தனமான காதல் முன் எடுபடவில்லை.“ராதையின் அன்பை விட நான் கொண்ட அன்பு ஆயிரம் மடங்கு உயர்வானது. நானே ராதையிடம் பேசுகிறேன்” என புறப்படாள். ராதையின் இல்லத்திற்குச் சென்றாள். கண்ணன் வெளியே போயிருந்தான். ராதை பக்தியுடன் கண்ணனின் ஆடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
துளசியும் கண்ணனின் பக்தை என்பதை ராதை அறிவாள். ஆனால் இப்போது தன் வாழ்க்கையைப் பங்கு போட வந்திருக்கிறாள் என அவளுக்கு தெரியாது. துளசியை வரவேற்றாள். ராதையின் பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை கண்ணனின் நாமமே வெளிப்பட்டது. துளசி ஆர்வமுடன் கேட்டாள். அதன் பிறகு தான் வந்த காரணத்தை ராதையிடம் சொன்னாள்.
“ராதா! நீ கண்ணன் மீது எவ்வளவு உயர்வான அன்பு வைத்துள்ளாய். உன்னைப் போல நானும் அவர் மீது அன்பு கொண்டுள்ளேன். கண்ணன் மீது சிறு வயது முதல் காதல் கொண்டேன். ஆனாலும் வெட்கத்தால் அதை வெளிப்படுத்த தயங்கினேன்.
என்னை அவரோடு சேர்த்து வை” என்றாள் கண்ணீருடன்.ராதைக்கு கோபம் வந்தது. “ இன்று முதல் என் தோழியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய். கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்பதை உலகமே அறியும்” என விரட்டினாள்.
துளசி கண்ணீருடன் வெளியேறிய போது கண்ணன் எதிரில் வந்தான். அவனைக் கண்டதும் அழுதாள் துளசி. எல்லாம் அறிந்தவன் என்றாலும் ஏதும் அறியாதது போல, “என்ன பிரச்னை உனக்கு” எனக் கேட்டான். துளசியும் தயக்கமுடன் காதலை வெளிப்படுத்தினாள். கண்ணன் அவளிடம், “நீ என் மீது கொண்ட காதலை நான் அறிவேன். ஆனால் ராதை முந்தி விட்டாளே! உன்னை இந்தப் பிறவியில் அடையும் பாக்கியம் எனக்கு இல்லை” என்றான்.
ராதை இதைக்கேட்டு ஆவேசமுடன் “என்ன சொல்கிறீர்கள்? இந்த பிறவியிலும் இனி வரும் எந்த பிறவியிலும் நானே உங்கள் மனைவி. இவளை அடுத்த பிறவியில் ஏற்பதாகச் சொல்கிறீர்களே. இவள் இங்கிருந்தால் தானே இந்த நினைப்பெல்லாம் உங்களுக்கு வரும். இவள் ஒரு அரக்கனை கணவனாக அடைய சபிக்கிறேன். இனி எப்படித் திருமணம் செய்கிறீர்கள் எனப் பார்க்கிறேன்” என கத்தினாள்.
துளசி இதைக் கேட்டு கலங்கினாள். ராதையைச் சமதானம் செய்தார் கண்ணன்.துளசியிடம்,“ நீ ராதை சொன்னபடி பூலோகத்தில் பிறப்பாய். ஒரு அரக்கனை கணவனாக அடைவாய். தெரிந்தோ, தெரியாமலோ ராதை உன்னை சபித்தது வசதியாகப் போய் விட்டது. பூவுலகில் சங்கசூடன் என்னும் அரக்கனாகப் பிறப்பேன். சென்ற பிறவியில் நீ என் மனைவியாகப் பிறந்திருந்தாய். அப்போது என் பெயர் சுதர்மன். ஒரு சாபத்தால் அடுத்த பிறவியில் அரக்கனாக மாறும்படி சபிக்கப்பட்டுள்ளேன்.
நான் ராட்சத வடிவம் தாங்கி வந்து உன்னை மணப்பேன்” என்றார். தன் சாபமே துளசிக்கு நல்வாழ்வுக்கு அடிகோலி விட்டது என்பதை உணர்ந்த ராதை வருந்தினாள். இருந்தாலும் கண்ணனின் லீலைகளில் இதுவும் ஒன்று என அமைதியானாள். துளசியிடம் மன்னிப்பு கேட்டாள்.
பிறகு துளசி பூலோகத்தில் வசித்த தர்மத்வஜன், மாதவி தம்பதியரின் மகளாகப் பிறந்தாள். கண்ணன் அரக்கனாகப் பிறந்து அவளை மணந்தார். அவரது அட்டகாசங்கள் அரக்க குணத்திற்கேற்ப அமைந்தன. கண்ணனின் அரக்க வடிவமான சங்கசூடனைச் சம்ஹாரம் செய்யவும் அந்தக் கண்ணனால் தான் முடியும் என்பது விதி. துளசியின் கற்பு எப்போது கெடுகிறதோ, அப்போது தான் அந்த அரக்கன் அழிவான் என்பதால் திருமாலை நோக்கி தேவர்கள் பிரார்த்தித்தனர்.
திருமால் அவர்களுக்கு காட்சியளித்து, “சங்கசூடனைப் போலவே நான் வடிவெடுத்து துளசியை அடைவேன்” எனக் கூறி துளசியுடன் சேர அவளுடைய கற்பு குலைந்தது. சங்கசூடன் கொல்லப்பட்டான். தன் முற்பிறவியில் கண்ணனை அடைய தான் கேட்ட வரம் ஞாபகம் வந்தது. அவள் கண்ணனின் மார்பில் நிரந்தரமாக குடியிருக்க அனுமதி கேட்டாள். அதன்படி இலையாக மாறி கண்ணனின் திருமார்பை அலங்கரித்தாள். இதனால் தான் கண்ணனுக்கு துளசி மாலையை அணிவித்து வழிபடுகிறோம்.

