ADDED : மே 07, 2026 08:56 AM

பிருகு முனிவரின் மகன் சியவனர் பெரும் தவசீலர். 12 ஆண்டுகள் பெரிய குளத்துக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தார். நீருக்குள் வசிக்கும் ஜீவராசிகள் எல்லாம் அவரைத் தெய்வமாகப் போற்றின.
ஒருநாள் மீனவர்கள் சிலர் சியவனர் இருந்த குளத்தில் வலையை வீசினர். அப்போது அதில் சியவனர் அகப்பட்டுக் கொண்டார். ஏதோ பெரிய மீன் சிக்கியதாக எண்ணிய மீனவர்கள் வலையை சிரமப்பட்டு இழுத்தனர். நீண்ட காலமாக சியவனர் நீருக்குள்ளேயே இருந்ததால், அவருடைய உடம்பின் மீது பாசி படர்ந்திருந்தது. மீனவர்கள் அவரைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டனர். அப்போது வலையில் சிக்கிய மீன்கள் இறந்ததைக் கண்டு சியவனர் வருந்தினார்.
தன்னுடன் அன்போடு பழகிய மீன்கள் துடிப்பதை பார்த்து தானும் உயிரை விடப் போவதாகக் கூறினார்.
பதறிய மீனவர்கள், “ தவத்தில் இருந்த முனிவர் இறந்தால் நம்மைத் தானே அந்த பாவம் சேரும்” எனக் கலங்கி மன்னரிடம் முறையிட்டனர்.
குளக்கரைக்கு வந்த மன்னர் முனிவரை வணங்கினார்.
“மன்னா! குளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள், இந்த மீனவர்களுக்கு சொந்தம் என்றால் நானும் அவர்களுக்குத் தானே சொந்தம். இந்த மீன்களை நீ விலைக்கு வாங்கினால் நானும் உனக்கு சொந்தமாகி விடுவேன். என்னையும் விலைக்கு வாங்கிக் கொள்” என்றார் சியவனர்.
மன்னரும் மறுக்காமல் அப்படியே செய்வதாகச் சொன்னார். முனிவருக்கு மட்டும் விலையாக ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார்.
“மன்னா! என் விலை ஆயிரம் பொற்காசுகள் தானா” என வருத்தப்பட்டார் முனிவர்.
இரண்டாயிரம் பொற்காசுகளை கொடுத்தார் மன்னர்.
அப்போதும், “ம்... இவ்வளவு தானா என் மதிப்பு” என்றார் முனிவர்.
“பத்தாயிரம் பொற்காசுகள் கொடுக்கட்டுமா?” என மன்னர் கேட்க அதற்கும் முனிவர் சம்மதிக்கவில்லை.
மன்னருக்கு வருத்தம். என்ன செய்வதென அறியாமல் நின்ற போது அந்த வழியாக மற்றொரு முனிவர் வந்தார். அவரிடம் நடந்ததை விளக்கமாகச் சொன்னார் மன்னர். அதற்கு அவர், “மன்னா! இதற்கு எளிதில் தீர்வு காணலாம். பொன், பொருளை மட்டுமல்ல... உன் நாட்டையே விட்டுக் கொடுத்தாலும் இந்த முனிவருக்கு ஈடாகாது.
இவர்களுக்கு ஒரு பசுவை விலையாகக் கொடு. மந்திரங்களின் வடிவம் பசு. அது அந்தணருக்கு சமமானது. இந்த முனிவருக்கு விலையாக ஒரு பசுவைக் கொடுத்தாலே போதும். ஏனெனில் அதன் மதிப்புக்கு எல்லையில்லை. அதன் உடம்பில் எல்லா தெய்வங்களும் குடியிருக்கின்றன. பசுவை பார்த்தாலே பாவம் தீரும். அதைச் சுற்றி வந்தால் எல்லா புனித தலங்களையும் தரிசித்த புண்ணியம் சேரும்” என்றார்.
இதையறிந்து முனிவருக்கு ஈடாக பசுவைக் கொடுப்பதாகச் சொன்னார் மன்னர்.
“மன்னா! இப்போது தான் சரியான விலையை நிர்ணயம் செய்தாய்” என்றார் சியவனர்.
தெய்வத் தன்மை கொண்ட பசுவின் பெருமையை தெரிந்து கொள்ளக் காரணமான மீனவர்களுக்கு நன்றி சொன்னார் மன்னர்.
