ADDED : ஜூன் 11, 2026 10:56 AM

அண்ணாமலையாரின் மகிமையை விளக்கும் விதத்தில் பிரம்மா தன் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை சனக முனிவரிடம் எடுத்துச் சொன்னார்.
என் இருப்பிடமான பிரம்ம லோகத்திற்கு ஒருமுறை அஷ்டவசுக்கள் என்னும் எட்டுபேரும் வந்தனர். அவர்கள் தங்களைப் பற்றி சொல்லி தற்பெருமையுடன் என்னிடம் பேசினர். இதைக் கேட்ட எனக்கு கோபம் வந்தது.
“தன்னைத் தானே புகழ்வது பாவம். அதனால் நீங்கள் செய்த தவப்பயன் எல்லாம் உங்களை விட்டு நீங்கட்டும்” என சாபமிட்டேன். வருந்திய அவர்கள், “அறியாமையால் பிழை செய்து விட்டோம் சுவாமி. பொறுத்தருள்க” என வேண்டினர். மனமிரங்கி, “கங்கை கரையில் சிவனை நோக்கி தவமிருந்தால் பாவம் தீரும்” என வழிகாட்டினேன்.
கங்கைக்கரையில் பலகாலம் தவமிருந்த அஷ்டவசுக்களுக்கு காட்சியளித்தார் சிவன். அவரிடம், “பிரம்மாவின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்திருக்கும் எங்களைக் காப்பாற்றுங்கள்” என கோரிக்கை வைத்தனர்.
“திருவண்ணாமலை என்னும் சிவத்தலத்திற்குச் செல்லுங்கள். அந்த மலையைச் சுற்றி எட்டு பேரும் எட்டு திசைகளில் தவமிருங்கள். அதன் பயனாக அந்த மலை எட்டு முகத்துடன் காட்சியளிக்கும். அதைப் பார்த்தால் உங்களின் பாவம் தீரும்” என அருள்புரிந்தார்.
அதன்படியே தவமிருந்த அஷ்டவசுக்கள் பாவம் நீங்கி தங்களின் இருப்பிடத்தை அடைந்தனர்.
இதை போல அண்ணாமலையார் அருளால் இன்னொரு சம்பவமும் நடந்தது.
என்னிடம் இந்திரன் ஒருமுறை, “பிரம்ம தேவரே! இந்திர பதவியை அடைய பலரும் தவத்தில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க ஒரு உபாயம் செய்யுங்கள்” என வேண்டினான்.
தேவலோகம், பாதாள லோகம், பூலோகம் என மூவுலகிலும் இல்லாத பேரழகியான திலோத்தமையை படைத்தேன். அவளின் அழகில் மனம் மயங்கியதால் அறிவை இழந்தேன். அவளை அடையத் துணிந்தேன். அவளோ பயந்து ஓடினாள். அவளை நெருங்கியதும், அழகிய மானாக மாறி ஓட்டம் பிடித்தாள். நானும் கலைமான் வடிவில் பின் தொடர்ந்தேன்.
தப்பிக்க வழியில்லாத அவள், ஒரு கிளியாக மாறி வானில் பறக்கத் தொடங்கினாள். நானும் ஆண் கிளியாக மாறி திலோத்தமையை விரட்டிப் பிடித்தேன். அந்த இடத்தில் திருவண்ணாமலை என்னும் சிவத்தலம் என் கண்ணுக்குத் தெரிந்தது. அண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவனை நினைத்தபடி திலோத்தமை, 'அபயம்... சுவாமி' என அவள் சரணடைந்தாள்.
அடைக்கலமாக வந்தவரை ஆதரிக்கும் சிவனும் மலையைப் பிளந்தபடி, வேடனாக எங்களின் முன்பு தோன்றினார். பார்வதியும் வேடுவப் பெண்ணாக பின்னே வந்தாள். வேதங்களும் நாய்களாக அவருடன் வந்தன. அவரின் வில்லும், கூரிய பார்வையும் கண்டதும் என் அறிவுக்கண் திறந்தது. திலோத்தமைக்கு செய்த பாவச்செயலை எண்ணி வருந்தினேன். மன்னிக்கும்படி சிவனைச் சரணடைந்தேன்.
அப்போது சிவன், “திலோத்தமை மீது மையல் கொண்டது மகாபாவம். பவித்திரமான அண்ணாமலையை தரிசனம் செய். உன் பாவம் பறந்தோடும்” என அருள்புரிந்தார்.
அண்ணாமலையை தரிசித்து விட்டு, நிம்மதியுடன் என் இருப்பிடமான பிரம்ம லோகத்திற்கு திரும்பினேன்.
