ADDED : ஜூலை 30, 2026 07:46 AM

பணக்காரர் ஒருவருக்கும், படிப்பாளி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
''வாழ்க்கைக்கு பணம் தான் ஆதாரம். கோயிலுக்கு போனாலும் வெறுங்கையுடன் செல்ல முடியுமா? பணம் இல்லாமல் அர்ச்சனை எப்படி செய்வது? பொழுது போக்க சினிமாவுக்குச் சென்றாலும் பணம் இல்லாவிட்டால் எப்படி? பணம் இல்லாதவன் பிணத்திற்குச் சமம். அதனால் மகாலட்சுமியின் அருள்தான் வேண்டும்'' என்றார் பணக்காரர்.
இதைக் கேட்ட படிப்பாளி, ''அறிவு இல்லாதவனுக்கு பணம் எவ்வளவு இருந்தும் பயன் இருக்காது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறார் அவ்வைப்பாட்டி. அதனால் சரஸ்வதியின் அருள்தான் வேண்டும்'' என்று பதிலடி கொடுத்தார். இருவரும் தீர்வு கேட்டு ஞானி ஒருவரை சந்தித்தனர்.
''கண்களில் சிறந்தது வலது கண்ணா? இடது கண்ணா? என்று கேட்டால் சரியா? அது போலத் தான் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுகிறீர்கள். வாழ்வுக்கு படிப்பு, பணம் அவசியம். இரண்டையும் நல்ல குறிக்கோளுக்காக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் அழிவுபாதைக்கு செல்ல நேரிடும். இதில் ஒன்று இல்லாவிட்டாலும் வாழ்வு முழுமை பெறாது'' என்றார் ஞானி.
'சபாஷ்... சரியான தீர்ப்பு' என அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து மகிழ்ந்தனர்.
