தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/காளி கொடுத்த வரம்

காளி கொடுத்த வரம்

காளி கொடுத்த வரம்


ADDED : ஜூலை 30, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆந்திராவில் பிறந்த ஏழை அந்தணச் சிறுவன் ராமன்.

இளமையிலேயே தந்தையை இழந்தான். அதனால் அவனும், அவனது தாயும் தெனாலி என்னும் ஊரில் இருந்த தாய்மாமனின் ஆதரவில் வாழ்ந்தனர். ராமனுக்கு அறிவுக்கூர்மையும், நகைச்சுவை திறனும் இயல்பாகவே இருந்தன. ஒருநாள் துறவி ஒருவரைச் சந்தித்தான் ராமன். அவர் காளியை நேரில் தரிசிக்கும் மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த காளி கோயிலுக்கு இரவில் சென்றான். கோயிலிலேயே தங்கி மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கினான். திடீரென காளி அவன் முன் தோன்றினாள். ''என்னை ஏன் அழைத்தாய்?'' எனக் கேட்டாள் காளி.

''தாயே! வறுமையில் வாடும் எனக்கு நல்லறிவும், செல்வமும் தர வேண்டும்'' என்றான். சிரித்தபடி காளி, ''உனக்கு பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?”

''ஆம் தாயே. புகழுடன் வாழ கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும்'' என்றான் ராமன்.

காளி கைகளை நீட்ட இரு கிண்ணங்கள் பாலுடன் தோன்றின. அவற்றை கொடுத்து, ''ராமா! இந்த கிண்ணங்களில் உள்ள பால் மிக விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். ஏதாவது ஒரு கிண்ணத்து பாலை நீ குடிக்கலாம். உனக்கு எது தேவையோ பார்த்துக்கொள்” என்றாள்.

''என்ன தாயே! இப்போது எதை குடிப்பது என்றே தெரியவில்லையே'' என யோசித்தான். சட்டென்று இடது கையில் இருந்த பாலை வலதுகை கிண்ணத்தில் ஊற்றி மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளிக்கு கோபம் வந்தது.

''ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்''

''ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்''என்றான்.

''ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?''

''கலக்கக் கூடாது என சொல்லவில்லையே''

அவனது பதிலைக் கேட்டு காளியே சிரித்தாள். ''ராமா! நீ கெட்டிக்கார பயல். என்னையே ஏமாற்றி விட்டாய். விகடகவி என்னும் புகழுடன் வாழ்வாயாக'' என வரம் அளித்து மறைந்தாள்.

ராமன் என்னும் அந்த இளைஞனே பிற்காலத்தில் தெனாலிராமன் என மக்களால் போற்றப்பட்டார். விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் அவையில் எட்டு அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us