ADDED : ஜூலை 09, 2026 09:25 AM

காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் கொடுத்தாலும் அதை ஏற்கமாட்டார். பணத்திற்கு ஆசைப்படாதவர் அவர். அப்படிப்பட்டவர் யாத்திரை செல்லும் போது சாப்பாட்டுக்காக அரிசி, பருப்பை எடுத்துச் செல்வது வழக்கம்.
ஒருமுறை ஆந்திராவுக்குச் சென்ற போது சீடர்கள் அரிசி மூடையுடன் சித்துாரை அடைந்தனர். அச்சமயம் அரிசிக்குத் தட்டுப்பாடு இருந்தது. அதை தடுக்க ஆந்திரா முழுவதும் சோதனை சாவடிகள் இருந்தன.
சித்துார் சாவடியில் மஹாபெரியவருடன் வந்த சீடர்களை தடுத்து, 'அரிசியை கொண்டு செல்ல அனுமதியில்லை' என்றனர் அதிகாரிகள். 'சாப்பாட்டுக்காக எடுத்துச் செல்கிறோம்' என சீடர்கள் சொல்லியும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
உடனே மஹாபெரியவர், 'அவர்களை தடுக்காதே. சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். அரசு உத்தரவை மீறக் கூடாது. யார் செய்தாலும் தப்பு தப்புத்தான்' என்றார்.
சுவாமிகள் சொன்னபடியே அதிகாரிகளிடம் அரிசியை ஒப்படைத்தனர். ஆனால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என யோசித்தபடியே மஹாபெரியவருடன் சீடர்கள் நடந்தனர்.
அந்த நேரத்தில் சித்துார் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வந்தார். நடந்ததை கேள்விப்பட்ட அவர், பறிமுதல் செய்த அரிசியை உடனடியாக மஹாபெரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். உடனே மஹாபெரியவர் இருக்கும் இடத்திற்கு முதல்வர் சென்றார்.
மஹாபெரியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். 'இதில என்ன இருக்கு? அதிகாரிகள் அவா வேலையை சரியாத்தான் செஞ்சிருக்கா. கடமையை செஞ்சவாளைக் குத்தம் சொல்லக் கூடாது. ஸ்ரீமடத்தின் மீது, நீங்க வெச்சிருக்கும் மரியாதைக்கு ரொம்ப சந்தோஷம்' என ஆசியளித்து விட்டு பயணத்தை தொடர்ந்தார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
