தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 9

அசுர வதம் - 9

அசுர வதம் - 9


ADDED : டிச 15, 2023 11:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முண்டாசுரன் வதம்

அசுரனான துந்துபி என்பவனின் மகன் முண்டாசுரன். இவன் பசி, தாகம், துாக்கத்தை துறந்து, புலன்களை அடக்கிச் சிவபெருமானை நோக்கி தவமிருந்தான். காட்சியளித்த சிவபெருமான் வரம் தர முன்வந்தார். தேவர்கள், அசுரர்கள் என எவராலும் வெல்ல முடியாத வலிமை வேண்டும் என்றும், சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் அழிவு நேரக் கூடாது என்றும் வரங்கள் கேட்டுப் பெற்றான் அசுரன்.

வரபலத்தால் மக்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினான். வானுலகம் சென்று தேவர்களை எல்லாம் விரட்டினான். அசுரனைக் கண்டு பயந்து மறைவிடங்களில் ஒளிந்து வாழ்ந்தனர்.

சங்க, பதும நிதிகளை அபகரித்ததோடு குபேரனைத் தன் அடிமையாக்கினான். சூரியன், சந்திரன் என இருவரையும் தன் கட்டுப்பாட்டிலேயே செயல்பட வேண்டும் எனச் சிறையில் தள்ளினான். இதனால் உலகமே இருளில் மூழ்கியது. அசுரனின் கொடுமை தாங்க முடியாத தேவர்கள், முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி இந்திரனிடம் முறையிட அவனும் போருக்கு புறப்பட்டான். ஆனால் அசுரனை அழிக்க முடியவில்லை. கடைசியில் உயிர் தப்பினால் போதும் என பிரம்மாவின் சத்தியலோகத்தில் தஞ்சம் புகுந்தான் இந்திரன்.

தேவலோகப் படையின் உதவியுடன் பிரம்மா போருக்கு புறப்பட்டார். அவராலும் அசுரனை வெல்ல முடியவில்லை. அதன் பின்னரே சிவபெருமானிடம் அசுரன் பெற்ற இரண்டு வரங்கள் பிரம்மாவின் கவனத்திற்கு தெரிய வந்தன. உடனே தேவர்கள், முனிவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் முறையிடுவதற்காக கைலாயத்திற்குச் சென்றார் பிரம்மா. ''சுவாமி... தங்களிடம் வரம் பெற்ற முண்டாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப் படைக்கிறான். குபேரனை அடிமைப்படுத்தினான். சூரியன்,

சந்திரனை சிறைப்படுத்தவே பூமியே இருளில் மூழ்கியது. முண்டாசுரனை அழித்து எங்களைக் காத்தருளுங்கள்'' என வேண்டினார்.

அசுரனை அழிப்பதாக உறுதியளித்த சிவபெருமான், தன் உடலில் இருந்து ஒரு உருவத்தை தோற்றுவித்தார்.

அந்த உருவம் சிவபெருமானை வணங்கிய போது, 'முண்டாசுரனை வதம் செய்' எனக் கட்டளையிட்டார். கைலாயத்திலிருந்து புறப்பட்ட அந்த உருவம் வேட்டைக்காரன் வடிவில் தென்திசை நோக்கிப் புறப்பட்டது. அங்கிருந்த முண்டாசுரனை போருக்கு அழைத்தது. இடி போல சிரித்தபடி, “நீ எங்கிருந்து வருகிறாய்? தேவர்கள் என்னிடம் அடிமைகளாகப் பணிபுரிகின்றனர். சூரியன், சந்திரனை சிறையில் தள்ளி விட்டேன். பிரம்மா, இந்திரன் என்னிடம் தோற்று ஓடிவிட்டனர். இதை அறியாமல் என்னைப் போருக்கு அழைக்கிறாயே! கோபம் வருவதற்குள் இங்கிருந்து ஓடி விடு” என அசுரன் எச்சரித்தான்.

“அசுரனே, வீண் பேச்சு வேண்டாம். உன்னை அழிக்கவே வடுகனாக வந்திருக்கிறேன்” என்றான். அதனைக் கேட்டதும், “என்னை அழிக்க வடுகனா? (வடக்கில் இருந்து வந்தவன் - வடுகன்) உன்னை இப்போதே அழிக்கிறேன் பார்” என்று சொல்லி தனது ஆயுதத்தை வேட்டைக்காரன் மீது வீசினான்.

வேட்டைக்காரன் அதைத் தடுத்து விட்டு, கொல்லும் நோக்கில் அசுரனை நோக்கி நடந்தான். தன் உருவத்தைப் பெரியதாக்கி இடது கையால் அசுரனை துாக்கினான். வலது கையால் அவனது தலையை மட்டும் கிள்ளியெடுத்து வீசினான். வேட்டைக்காரன் வடிவில் வந்திருப்பதும் சிவபெருமானே என்பதை அறியாத முண்டாசுரன் துடிதுடித்து உயிர் விட்டான்.

அசுரனின் முடிவைக் கண்ட பிரம்மன், இந்திரன், தேவர்கள் அனைவரும் பூக்கள் துாவி 'வடுக மூர்த்தி வாழ்க' எனக் கொண்டாடினர்.

சிறையில் வாடிய சூரியன், சந்திரன், குபேரன் உள்ளிட்ட அனைவரும் தங்களை விடுவித்த வடுகமூர்த்திக்கு நன்றி தெரிவித்தனர். சூரியன், சந்திரனின் வரவால் இருள் சூழ்ந்த உலகம் மாறி எங்கும் ஒளி பரவியது. அதைக் கண்டு மகிழ்ந்த வடுகமூர்த்தி அங்கிருந்து புறப்பட்டுக் கைலாயம் சென்று சிவபெருமானுடன் சேர்ந்தார்.

வடுகமூர்த்தி வழிபாடு

வடுக மூர்த்தியைச் சனிக்கிழமையன்று வழிபட்டால் சனீஸ்வரர், கிரகங்களால் ஏற்படும் துன்பம் மறையும். தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் வழக்கில் வெற்றி கிடைக்கும். ஞாயிறன்று திருநீறு அபிஷேகம் செய்ய திருமணத் தடை நீங்கும். புதனன்று வெண் தாமரை மலரால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்தால் ஆயுள் பெருகும்.



-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us