தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/முத்தான மூன்று யோசனைகள்

முத்தான மூன்று யோசனைகள்

முத்தான மூன்று யோசனைகள்


ADDED : பிப் 02, 2024 01:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 01:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1932 நவ.17 அன்று மயிலாப்பூரில் கூடியிருந்த நீதித்துறையினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளுக்கு ஆசி வழங்கிய காஞ்சி மஹாபெரியவர் மூன்று யோசனைகளை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். '' கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தற்காலத்தில் நகரங்களில் குடியேறி வருகின்றனர். கிராமத்திலுள்ள வீடு, வயல்களை விற்றுக் கிடைத்த பணத்தில் வசதியாக வாழ ஆசைப்படுகின்றனர்.

முதன்முதலில் இதைச் செய்தவர்கள் படித்தவர்கள்தான்! சாமானிய மக்களும் அவர்களைப் பின்பற்றி வீடு, நிலத்தை விற்கத் துவங்கினர். நகரங்களில் குடியேறிய பிறகு பூர்வீகத்து வீட்டை பலர் பராமரிக்க விரும்புவதில்லை. இடிந்து போய் குட்டிச்சுவராக அவை காட்சியளிக்கின்றன. சரி... நகரத்துக்கு வந்தாச்சு... அப்போதாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? மனதில் அமைதி இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை.

காரணம் நாகரிகம் என்ற பெயரில் தேவைக்கும் அதிகமாக பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். வாங்கும் முன் 'இது நமக்கு தேவையானதா?' என யோசிப்பதில்லை. இதனால் பொருட்களின் எண்ணிக்கை வீட்டில் பெருகுகிறது. ஒரு கட்டத்தில் இடப்புழக்கம் அதிகமிருக்கும் இடமாகப் பார்த்து குடியேறும் நிலை ஏற்படுகிறது.

நகரத்தில் குடும்பம் நடத்திட ஆகும் செலவும் அதிகம். அவசரகதி, பணப்பற்றாக்குறையால் தவிக்கும் நிலையில் நிதானம், பொறுமை யாருக்கும் இருப்பதில்லை.

கிராமத்திலேயே குடியிருந்தால் எளிமை, நிம்மதிக்கு குறைவிருக்காது. பின்வரும் மூன்று யோசனைகளைப் பின்பற்றினால் நகரவாசிகள் நலமுடன் வாழலாம்.

* பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் ஆடைக்காக செலவழிக்கும் பணம் மிக அதிகம். எனவே ஆடம்பரமான ஆடைகளைத் தவிர்த்தல் அவசியம்.

* அடிக்கடி காபி சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசி, கோதுமைக் கஞ்சி அல்லது மோர் குடிப்பது நல்லது.

* கல்யாணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளின் போது ஆடம்பரம் கூடாது. மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ கூடாது. கிளப், பீச் என பொழுதுபோக்கச் செலவழிக்கும் நேரத்தை அன்றாட அனுஷ்டானம், தினசரி பூஜை செய்ய வேண்டும்” என்றார்.

92 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மஹாபெரியவர் சொன்ன இக்கருத்துக்கள் இந்த காலத்திற்கும் தேவையானதாக உள்ளது.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us