ADDED : பிப் 09, 2024 11:02 AM

''முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் செய்வது அவசியமா? அந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் போதாதா?'' என காஞ்சி மஹாபெரியவரிடம் கேட்டார் பக்தர் ஒருவர்.
''அன்னதானம் செய்ய வேண்டாம் என யாரும் சொல்லவில்லையே?'' என்று சிரித்தார் சுவாமிகள்.
''அது வேறு. இது வேறு. ஒன்றைச் செய்தால் இன்னொன்றைச் செய்ய வேண்டாம் என்பதல்ல. ஏழைகளுக்கு உதவுவது அவசியம் தான். அதைப் போல சிரார்த்தம் செய்வது மிக அவசியம்'' என்றார்.
'சிரார்த்தத்தில் வைக்கும் பிண்டத்தை முன்னோர் ஏற்பது எப்படி சாத்தியம்?'' என்றெல்லாம் அவருக்கு பல சந்தேகங்கள். பார்வையாலே புரிந்து கொண்ட மஹாபெரியவர் தொடர்ந்தார்.
''உன் மகன் வெளியூரில் தங்கிப் படிக்கிறானே? அவனுக்காக ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான்களை அனுப்புகிறாயா என்ன? பணம் தானே அனுப்புகிறாய்?''
'ஆமாம்' என அவரும் தலையசைத்தார்.
'' நீ மணியார்டர் பண்ணும் அதே பணமா அவனுக்கு போகிறது? இல்லையே! அந்த மதிப்புள்ள வேறு நோட்டைத் தானே கொடுக்கிறார்கள்.
பணம் அங்கே போய்ச் சேர போஸ்ட் ஆபீசில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா? நாம் பண்ணுகிற திதி, திவசம், அமாவாசை தர்ப்பணம் எல்லாம் விண்ணப்பம் பூர்த்தி செய்வது போலத் தான்.
ரிஷிகள் வகுத்துக் கொடுத்த மந்திரம் மூலமாக நாம் கொடுக்கும் பொருட்கள் முன்னோரைச் சென்றடையும். ஹாஸ்டலில் இருக்கும் உன் மகனுக்குப் பணம் சேர்வது மாதிரி.
அவனுக்கு நீ ஏன் பணம் அனுப்புகிறாய்? அவன் மீதுள்ள அக்கறை. முன்னோர் மீதும் நமக்கு அக்கறை வேண்டும். அவர்களிடம் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும். அதற்குத் தான் இந்த சிரார்த்தம். சிரத்தையாக(அக்கறை) செய்வதால் தான் 'சிரார்த்தம்' என்றே பெயர். முன்னோரை 'தென்புலத்தார்' என்கிறது தமிழ்மறையான திருக்குறள். அவர்களைக் காப்பது இல்லறத்தாரின் கடமை என்றும் சொல்கிறது.
சிரார்த்தத்தில் மந்திரம் மிக முக்கியம். ரிஷிகள் சொல்லித் தந்த சூட்சுமம் அது. நம்பிக்கையோடு சிரார்த்தம் செய். முன்னோர் ஆசியால் நலமுடன் வாழ்வாய். ஏழைகளுக்கு அன்ன தானமும் செய்'' என்றார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.