மாசிமக விழாவின் கதாநாயகன் எமன்.
ஒரு காலத்தில் சிவன் இவனுக்கு நிறைய வேலை கொடுத்து விட்டார்.
உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் உயிரையும் பறித்து விட்டு, எமனும் இறந்து விட வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படி உலகம் தண்ணீரால் அழிந்தது. எல்லா உயிர்களையும் அழித்த எமனும்
இறந்து விட்டான். பின் புதிய உலகத்தைப் படைத்தார். யார் என பாராமல் உயிரைப் பறிக்கும் சமதர்மத்தின் அதிபதியான எமனும் மீண்டும் பிறந்தான்.
உலகம் அழிந்த அந்த நாளே மாசி மகம். எமன் என்ற வார்த்தையை 'இயமன்' என்று எழுதுவதே சரியானது. இதற்கு 'எல்லாவற்றையும் அடக்குபவன்' என்று பொருள். வாழும்காலத்தில் மனிதன் யாருக்கும் அடங்காமல் மமதையுடன் ஆட்டம் போடுவான். எமன் அவன் மீது பாசக்கயிறை வீசிவிட்டால், ஆட்டம் பாட்டம் அடங்கிவிடும். அவரைக் 'கூற்றுவன்' என்றும் சொல்வர். இதற்கு உயிரையும், உடலையும் பிரித்து கூறுபோடுபவன் என்பது பொருள்.
'சமன்' என்பதும் இவரது பெயர். அதாவது இவருக்கு ஏழை, பணக்காரர், மனிதன், மிருகம், பூச்சி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. யாருடைய உயிரை வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு இல்லாமலும் பறித்து விடுவார். இவனை 'மறலி' என்பர். இதற்கு 'வலிமை மிக்கவர்' என பொருள். அந்தகன் என்றும் சொல்வர். வாழ்க்கையை அந்தத்துக்கு (முடிவு) கொண்டு வருபவர் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.