ADDED : பிப் 23, 2024 11:44 AM

அஷ்டமி, நவமி என ஏதாவது காரணம் சொல்லி செயல்களைத் தள்ளி வைக்க தேவையில்லை என்பதை உலகிற்கு உணர்த்த திருஞான சம்பந்தர் அற்புதம் நிகழ்த்திய தலம் மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகம். இங்குள்ள ஏடகநாதசுவாமியை தரிசிப்போருக்கு நாள் எல்லாம் இனிய நாளாக அமையும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் முன் இங்கு சுவாமிக்கு அழைப்பிதழ் வைத்து அர்ச்சனை செய்தால் தடையின்றி சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
ஏழாம் நுாற்றாண்டில் மதுரையை அரிகேச நெடுமாற பாண்டிய மன்னர் ஆட்சி செய்தார். இவரது மனைவி மங்கையற்கரசி. சிவ வழிபாட்டை மறந்த மன்னர் சமண மதத்தில் இணைந்தார். இதனால் வருந்திய மங்கையற்கரசி மீண்டும் பாண்டிய நாட்டில் சிவவழிபாடு தழைக்க விரும்பினார். அதற்காக வேதாரண்யத்தில் தங்கியிருந்த சம்பந்தரை வரவழைக்க சிவனடியார்களை அனுப்பினார். அப்போது அங்கிருந்த திருநாவுக்கரசர், 'நாளும் கோளும் சரியில்லை; வேறொரு நாளில் மதுரைக்கு செல்லுங்கள்' என சம்பந்தரை தடுத்தார். “சிவனடியார்களை நவக்கிரகங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்று சபதமிட்டு புறப்பட்ட சம்பந்தர், மதுரையில் மடம் ஒன்றில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் அந்த மடத்திற்கு தீயிட்டனர்.
'இட்டவர்களையே சென்று சேரட்டும் தீ' என சம்பந்தர் ஏவிவிட, நெருப்பு மன்னரின் உடம்பில் வெப்பு நோயை உண்டாக்கியது. எரிச்சல் தாங்க முடியாமல் மன்னர் கதறினார். சம்பந்தரை வரவழைத்தால் நோய் தீரும் என மங்கையற்கரசி தெரிவிக்கவே மன்னரும் சம்மதித்தார். அரண்மனைக்கு வந்த சம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் பதிகத்தைப் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மடப்பள்ளி சாம்பலை பூசி விட்டார். உடனே மன்னரின் உடம்பில் சூடு தணிந்தது.
வெறுப்படைந்த சமணர்கள் அனல்வாதம், புனல்வாதம் என்னும் போட்டிக்கு சம்பந்தரை அழைத்தனர். அனல்வாதம் என்றால் தேவாரப் பாடல் எழுதிய ஏடுகளை நெருப்பில் இடுவது. சம்பந்தர் ஏடுகளை நெருப்பில் இட்ட போது அவை எரியாமல் பச்சையாகவே இருந்தன. புனல்வாதம் என்பது ஓடும் நீரில் ஏடுகளை இடுவது. சம்பந்தர் ஏடுகளை வைகையாற்றில் இட்ட போது, அவை தண்ணீரை எதிர்த்துச் சென்று ஓரிடத்தில் கரையேறின. ஏடு கரை ஏறிய இடம் 'திருவேடகம்' என்னும் சிவத்தலமாக தற்போது விளங்குகிறது.
ஆண்டுதோறும் இங்கு ஆவணி பவுர்ணமியன்று புனல்வாத நிகழ்ச்சி நடக்கும். இங்கு ஏடகநாதர் என்னும் பெயரில் சிவபெருமானும், ஏலவார்குழலி என்னும் பெயரில் அம்மனும் கோயில் கொண்டுள்ளனர். சுவாமிக்கு பத்ரிகா பரமேஸ்வரர் என்றும் பெயருண்டு.
எப்படி செல்வது: மதுரை --- சோழவந்தான் சாலையில் 17 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி பவுர்ணமி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:30 -- 12:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04543 - 259 311
அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் 20 கி.மீ., (குடும்பத்தில் நிம்மதி நிலைக்க...)
நேரம்: அதிகாலை 5:00 -- 12:30 மணி; மாலை 4:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 0452 - 234 9868, 234 4360