தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 11

பச்சைப்புடவைக்காரி - 11

பச்சைப்புடவைக்காரி - 11


ADDED : ஏப் 26, 2024 01:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 01:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு...

தென்மாவட்டங்கள் மழை, வெள்ளத்தில் தத்தளித்த போது மணி என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் ஒரு அரசியல் அமைப்பைச் சார்ந்தவர். அரசு வட்டாரத்தில் செல்வாக்கு உடையவர். அதை சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாதவர். கோவிட் காலத்தில் பலரைக் காப்பாற்றியிருக்கிறார்.

எப்போதும் சிரித்த முகம், குறும்பு பேச்சுடன் இருக்கும் மணி இன்று சோர்ந்து போயிருந்தார். “என்னாச்சு, உங்கள இப்படி பார்த்ததில்லையே? உங்கள மாதிரி ஆளுங்க கவலப்பட்டா நாட்டுக்கே நல்லதில்ல”

“வீடு நல்லா இருக்கு சார். நாடுதான் நல்லா இல்ல”

“என்னாச்சு?”

“உங்களுக்கு தெரியும்ல? கடந்த நாலஞ்சி நாள்ல பெஞ்ச மழையில தாமிரபரணி ஆத்துல வந்த வெள்ளத்துல திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள்ல பல கிராமங்கள் தண்ணில மூழ்கிருச்சி. எத்தனை பேரு சோறு தண்ணியில்லாம தவிக்கிறாங்க தெரியுமா? எங்க தொண்டர்கள் மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு துடிக்கிறாங்க”

மணிக்கு என்னாச்சு? இவர் ஏன் நேற்றைய தலைப்புச் செய்தியை என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“எங்க கட்சித் தொண்டர்களை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி மக்களுக்கு உதவியச் செய்யுங்கன்னு சொல்லியிருக்கேன்”

“அவங்க செய்யறாங்களா?”

“அதுலதான் சார் ஒரு சிக்கல். உடனடியா தண்ணி பாட்டில், பால், சாப்பாடு பொட்டலம் வேணுமாம்”

“எவ்வளவு?”

“ஒவ்வொண்ணும் ஒரு லட்சம் வேணும். குடிக்க நல்ல தண்ணி இல்லையாம். நெறையப்பேரு சாப்பிட்டு ரெண்டு நாள் ஆயிருச்சாம்”

அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

“எல்லாத்துக்கும் சேர்த்து 45 லட்சம் ஆகும்னு சொல்றாங்க. எங்க அமைப்புகிட்ட இப்போ ஒரு லட்சம் ரூபாய்தான் இருக்கு. என் கையில இருக்கற ஒரு லட்சத்தையும் கொடுத்துரலாம்னு இருக்கேன். என் நண்பர்கள் எல்லாம் கசக்கிப் பிழிஞ்சா இன்னும் மூணு லட்சம் தேத்திரலாம். பாக்கிப் பணத்துக்கு எங்க சார் போவேன்?”

இந்த உத்தமருக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.

“எனக்கு மூணு, நாலு நாள் டயம் கொடுத்தீங்கன்னா அஞ்சாறு லட்சம்...''

மணி என்னை முடிக்க விடவில்லை.

“மூணு நாள்ல என்னால மூணு கோடி கூட திரட்ட முடியும். ஆனா அதனால பிரயோஜனம் இல்ல. இன்னிக்குப் பசிக்கும், தாகத்துக்கும் சோறு, தண்ணி கொடுக்கணும் சார். மதியம் ரெண்டு மணிக்குள்ள எனக்கு 45 லட்ச ரூபாய் வேணும். அதுக்கு என் உயிரைக் கொடுக்கவும் தயாரா இருக்கேன். என்ன செய்யப் போறேன்னு தெரியல, சார். மனுஷ முயற்சியில ஒண்ணும் நடக்காதுன்னு தெரிஞ்சி போச்சி. பச்சைப்புடவைக்காரி மனசு வச்சாத்தான் உண்டு”

“மணி, எனக்கு உங்களப் பத்தி அவ்வளவா தெரியாது. ஆனா பச்சைப் புடவைக்காரியப் பத்தி -நல்லா தெரியும். உங்க சொந்த உபயோகத்துக்காக ஒத்த ரூபாய் கேட்டீங்கன்னா அதுக்கு ஆயிரம் தரம் யோசிப்பா. கர்மக்கணக்கு எப்படி இருக்குன்னு பத்து தரம் பாப்பா. ஆனா அடுத்தவங்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் கேட்டாக்கூட அடுத்த நொடியே கொடுத்திருவா. தொடர்பு இல்லாதவங்க கஷ்டப் படறாங்களேன்னு நாம கண்ணீர் வடிச்சா இந்த உலகத்தையே துாக்கி கையில கொடுத்திருவா. இது சத்தியம்”

“அவளாலதான் மக்கள் கஷ்டம் தீரணும். நாம என்ன செய்ய முடியும்?”

சில நொடிகள் பேசாமல் அமர்ந்து விட்டு மணி கிளம்பிப் போய் விட்டார். முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

சில நிமிடம் கழித்து வெளியே யாரோ கூட்டிப் பெருக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்... என்ற நினைப்புடன் வெளியே ஓடினேன். கூட்டிக்கொண்டிருந்தவள் புன்னகைத்தாள். அவள் யாரென தெரிந்ததும் கால்களில் விழுந்து வணங்கினேன்.

மணி சொன்னதை சொல்லலாம் என நினைத்தேன். பேச்சு வந்தால்தானே! என்னிடமிருந்து விம்மல்கள் வெடித்தன. பச்சைப்புடவைக்காரி சிரித்தாள். அருகில் இருந்த இருக்கையில் அவள் அமர்ந்து கொள்ள காலருகே தரையில் அமர்ந்து கொண்டேன்.

“நீ சொன்னது சரிதான். உன் வார்த்தைகளை உடனே மெய்ப்பிக்கிறேன்”

அலைபேசி அலறியது. நான் அதை அணைக்கப் போனேன்.

“எடுத்துப் பேசு. நல்ல செய்திதான்”

அலைபேசியை எடுத்தவுடன் மணியின் அழுகைதான் கேட்டது. அவரைச் சமாதானப் படுத்திப் பேச வைக்க வேண்டியதாயிற்று. விம்மல்களுக்கிடையில் மணி சொன்னது இதுதான்.

என்னிடம் பேசிவிட்டுச் சென்ற ஐந்தாவது நிமிடம் மணிக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. மும்பையில் பெரிய தொழிலதிபர் ஏதோ விஷயமாகப் பேசியிருக்கிறார். மணியின் குரலில் சுரத்து இல்லை.

“மணி உங்களுக்கு ஏதாவது பிரச்னையா? உங்களுடைய வழக்கமான குரலக் காணோமே?”

“அதெல்லாம் இல்லையே, நல்லாத்தானே இருக்கேன்.

“என்கிட்ட எதையும் மறைக்காதீங்க. போன வருஷம் என்ன எவ்வளவு பெரிய இக்கட்டுலருந்து காப்பாத்தினீங்க தெரியுமா? உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன் மணி. என் நன்றிக்கடனைக் தீர்க்க ஒரு வாய்ப்பு தரக் கூடாதா?”

தென் மாவட்டங்களின் வெள்ள நிலைமையை மணி கோடிட்டு காட்டியிருக்கிறார். தான் சார்ந்திருக்கும் அரசியல் அமைப்பு செய்யவிருந்த தொண்டுகளையும், பணம் திரட்டுவதில் தான் முனைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

“அது என்ன 45 லட்ச ரூபாய் கணக்கு?”

“இல்ல சார் ஒரு லட்சம் பாக்கெட் சாப்பாடு. ஒரு லட்சம் பால் பாக்கெட்.

தண்ணி பாட்டில். அதெல்லாம்...''

“அதச் சொல்லல. அதுல ஏன் கொசுறு வைப்பானேன்? உங்க பேங்க் அக்கவுண்ட் விவரங்கள அனுப்பி வைங்க. இன்னும் இருபது நிமிஷத்துல உங்க கணக்குல அம்பது லட்ச ரூபாய் வரவாயிரும். இத உங்களுக்கு செஞ்ச உதவியா நினைக்கல, மணி. நேத்து வெள்ளச் செய்தியைக் கேள்விப்பட்டதும் ஏதாவது உதவி செய்யணுமேன்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். நீங்க வழியைக் காட்டினீங்க. இதனால நான் உங்களுக்குப் பட்ட நன்றிக்கடன் ஜாஸ்தியாயிருச்சேயொழிய குறையல”

மணியால் அழுகையை நிறுத்த முடியவில்லை. என்னாலும்தான். பச்சைப்புடவைக்காரியின் கால்களில் மீண்டும் விழுந்தேன்.

“உனக்கு என்னப்பா வேண்டும், சொல். கொடுத்து விட்டுப் போகிறேன்”

“அடுத்தவர் துன்பத்தைத் துடைக்க நினைப்பவர் கையில் ஆயிரம் உலகங்களைத் துாக்கித் தரவும் நீங்கள் தயங்க மாட்டீர்கள் என புரிந்துகொண்டேன், தாயே. இதுநாள் வரை நான், என் சுகம், என் குடும்பம் என்றே வாழ்ந்து விட்டேன். மணியைப் போல் பிறருக்காகக் கவலைப்படும் மனம் வேண்டும். தொடர்பில்லாதவர்கள் சிந்தும் கண்ணீரைத் துடைக்க என் கைகள் முன்வர வேண்டும்”

“அது நீ செய்ய வேண்டிய தவம். தவம் நிறைவடைந்தபின் வரம் கேட்கலாம். நீயோ தவத்தையே வரமாகக் கேட்கிறாயே.”

“சரி, வேண்டாம். எந்தக் காலத்திலும் உங்களை மறக்காத மனதைக் கொடுங்கள்”

“தந்தேன்”

“நீங்கள் அன்பின் வடிவம்தானே! நீங்கள் என் மனதில் எப்போதும் இருந்தால் அன்பு தன்னால் வந்துவிடுமே! உங்களிடமிருந்து அன்பென்னும் வரத்தை எப்படிப் பிடுங்கினேன், பார்த்தீர்களா?”

தாயின் சிரிப்புச் சத்தம் அறையெங்கும் எதிரொலித்தது. அடுத்த கணம் அவள் மறைந்துவிட்டாள்.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us