தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 25

அசுர வதம் - 25

அசுர வதம் - 25


ADDED : ஏப் 26, 2024 01:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 01:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிம்ஹிகா வதம்

காசியப முனிவர், சுரசை தம்பதிக்கு சிம்ஹிகா, அஜமுகி என்ற இரு மகள்களும், சூரபத்மன், சிங்காசுரன், தாரகாசுரன் என்ற மூன்று மகன்களும் பிறந்தனர். இவர்களில் மூத்தவளான சிம்ஹிகா தென்திசைக் கடலுக்குள் வசித்து வந்தாள். அவள் தவமிருந்து படைப்புக்கடவுளான பிரம்மாவிடம் வரம் ஒன்றைப் பெற்றாள். அதன்படி ஒருவரின் நிழலைக் கண்டதும் அதைப் பற்றி இழுப்பாள். நிழலுக்குரிய உருவம் அவளை நெருங்கும். கடலின் மேற்பரப்பில் தெரியும் பறவைகளின் நிழலைப் பற்றி இழுப்பாள். அருகில் வந்ததும் உணவாக்குவாள்.

இந்நிலையில் இலங்கை மன்னரான ராவணனிடம் இருந்து சீதையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் ராமர். அப்போது கிஷ்கிந்தை நாட்டில் இருந்து வானர வீரனான வாலியால் வெளியேற்றப்பட்ட சுக்ரீவனின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அவனது வரலாறைக் கேள்விப்பட்ட ராமர், ''பயப்படாதே... உன் அண்ணன் வாலியைக் கொன்று உன்னை கிஷ்கிந்தையின் மன்னராக்குவேன்'' என உறுதியளித்தார். அதற்கு ஈடாக சீதையைக் கண்டுபிடிக்க உதவி செய்வதாக சுக்ரீவனும் தெரிவித்தான். இதன்படி வாலியைக் கொன்று சுக்ரீவனை மன்னராக்கினார் ராமர்.

அதன் பின் சுக்ரீவன், தன்னுடைய வானரப் படையினரை பல குழுக்களாக பிரித்து சீதையைத் தேட அனுப்பினான். இதில் வாலியின் மகன் அங்கதன் தலைமையிலான வானரர்கள் மகேந்திரமலையில் தங்கியிருந்தனர். அங்கு கழுகு அரசனான சம்பாதி மூலம் ராவணனால் சீதை கடத்தப்பட்டதையும், கடலைக் கடந்தால் இலங்கைக்கு செல்லலாம் என்பதையும் அறிந்தனர். இதன்பின் அனுமனுக்கு அறிவுரையை கழுகரசனான சம்பாதி சொன்னது.

அனுமன் கடலைக் கடந்து செல்லும் வழியில் மைந்நாகம் என்னும் மலை வழிமறித்தது. இது அரக்கனின் செயல் எனக் கருதிய அனுமன், அந்த மலையை காலால் எட்டி உதைத்தார். அப்போது அது, “நான் அரக்கன் அல்ல. வானுலகைச் சேர்ந்த என்னை தேவர்களின் தலைவன் இந்திரன் அனுப்பி வைத்தார். சிறிது நேரம் என் மீது அமருங்கள்” என்றது. உதவிக்கு வந்தவரை காலால் உதைத்தோமே என வருந்திய அனுமன் நன்றி தெரிவித்து பயணத்தை தொடர்ந்தார்.

வானில் பறந்த அனுமனை, கடலில் வசித்த அரக்கியான சுரசை வழிமறித்தாள். அந்த வழியாகச் செல்பவர் அனைவரும் அவளின் வாய்க்குள் சென்று வர வேண்டும் என்றாள். அதைக் கேட்ட அனுமன் தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டே போனார். அனுமனின் உருவத்திற்கேற்ப அவளும் வாயைப் பெரிதாக்கினாள். திடீரென அனுமன் தன் உடலைக் கட்டை விரல் அளவிற்குச் சுருக்கிக் கொண்டு அவள் வாயை மூடும் முன்பாக வெளியேறினார். அனுமனை உணவாக்க விரும்பிய சுரசையின் திட்டம் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு சிறிது தொலைவு சென்ற அனுமனை யாரோ இழுப்பது போல அவருக்கு தோன்றியது. சுற்றிலும் பார்த்தார். யாரும் இல்லை. குழப்பத்துடன் நின்ற போது, கடலுக்குள் இருந்த அரக்கி சிம்ஹிகா மகிழ்ச்சியுடன் அனுமனின் நிழலை இழுத்தபடி இருந்தாள். அரக்கியால் இழுக்கப்படுகிறோம் என தெரியாமல் கடலின் மேற்பரப்பை அனுமன் அடைந்தார்.

அப்போதுதான் கழுகரசன் சம்பாதி தனக்கு கடல்வழியில் குறுக்கிடும் தடைகள் பற்றி அறிவுரை சொன்னது நினைவுக்கு வந்தது. அரக்கியான சிம்ஹிகா தன் நிழலை இழுத்து விழ வைத்தாள் என்பது புரிந்தது. அதற்குள் அனுமனை விழுங்கினாள் சிம்ஹிகா.

அவளுக்கு இரையாகும் முன்பாக தப்பிக்க வேண்டும் என உடலைப் பெரிதாக மாற்றி அரக்கியின் மார்பை பிளந்து கொண்டு வெளியேறினார் அனுமன். இதை எதிர்பார்க்காத சிம்ஹிகா துடித்து இறந்தாள்.

அனுமன் மீண்டும் பறக்கத் தொடங்கினார். சிலமணி நேரப் பயணத்தில் இலங்கையை அடைந்தார். அங்கிருந்த லங்கிணி என்னும் அரக்கி காலால் அனுமனை எட்டி உதைத்தாள்.

கோபமடைந்த அனுமனும் அவளை உதைத்தார்.

சற்று துாரத்தில் விழுந்த அவளுக்கு, “உன்னை ஒரு வானரம் எட்டி உதைக்கிறதோ, அப்போது இலங்கையின் அழிவு தொடங்கும்” என பிரம்மா சொன்னது அரக்கிக்கு நினைவுக்கு வந்தது. அனுமனை வணங்கிய லங்கிணி இலங்கைக்கு உள்ளே செல்ல அனுமதித்தாள். அனுமனும் தன் உருவத்தை மிகச் சிறிதாக்கிக் கொண்டு சீதையின் இருப்பிடத்தை தேடத் தொடங்கினார்.

பெயர்க் காரணம்

* 'ஹனு' என்றால் தாடை, 'மன்' என்றால் பெரியது. 'ஹனுமன்' என்பதற்கு 'பெரிய தாடை உடையவன்' எனப் பொருள்.

* 'ஹன்' என்றால் கொன்றவன், 'மானம்' என்றால் 'தற்பெருமை'. அதன்படி, 'ஹன்மான்' என்பதற்கு 'தற்பெருமையைக் கொன்றவன்'.

* ஆண் மந்தி (ஆண் குரங்கு) என்பதே 'அனுமன்'

* அஞ்சனை மகன் என்பதே 'அனுமன்'.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us