தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொல்லச் சொல்ல இனிக்குதடா -1

சொல்லச் சொல்ல இனிக்குதடா -1

சொல்லச் சொல்ல இனிக்குதடா -1


ADDED : ஜூன் 21, 2024 12:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 12:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்பத்து இளையனார்

“நல்லா இருக்கீங்களா பாட்டி?'' பல வருடங்களுக்கு பின் வந்த பாட்டியை நலம் விசாரித்தான் யுகன்.

“நல்லா இருக்கேன்டா. காலையில போயிட்டு இப்ப தான் வர்றதா? நான் இன்னிக்கு வருவேன்னு தெரியுமே... ஏன் தாமதமா வர்றே”

''ஆபிசில கொஞ்சம் வேலை இருந்துச்சு. அதனால தான் தாமதம். இப்பவாவது என்ன பார்க்க உனக்குத் தோனுச்சே... பிரயாணம் எப்படி இருந்தது?”

எங்கம்மாவும், அப்பாவும் மலேசியாவுல இருக்குற என் தங்கச்சி மீனாட்சிய பார்க்க போகவே நீ இங்க வந்தே. இல்லேன்னா வருவியா''

'' எங்கப்பன் முருகன் புண்ணியத்தில நல்லபடியா வந்தாச்சு” என கையில் இருந்த திருநீற்றை அவன் நெற்றியில் இட்டு வாஞ்சையுடன் சிரித்தார் பாட்டி.

“பாட்டி, எப்ப உங்கப்பாவுக்கு முருகன்னு பெயர் மாத்தின?” என பாட்டியை வம்புக்கு இழுத்தான் யுகன்.

“பேராண்டி, எனக்கு மட்டுமல்ல நம் எல்லாருக்கும் முதல் தெய்வம் முருகன் தான்''

“எப்படி பாட்டி?”

“உலகத்தில முதலில் தோன்றியது மலைன்னு இலக்கியம் சொல்லுது. குறிஞ்சின்னா மலையும் மலை சார்ந்த இடமும் தானே! குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மலையில தான் மனிதன் தோன்றினான். அப்படி பார்க்கும்போது பக்தி உணர்வு தோன்றிய காலத்தில் முருகனே முதல் தெய்வமாக தோன்றினார்”

“இதெல்லாம் தெரிஞ்சு இருக்கே பாட்டி”

“ஆமாண்டா. எல்லாம் உங்க தாத்தா சொன்னது தான். காணாபத்யம், கவுமாரம், சாக்தம், சைவம், வைணவம், சவுரம் என ஆறு சமயங்கள் இருந்தன. இவற்றை ஆதிசங்கரர் தான் முறைப்படுத்தினார். இதில முருகனை பரம்பொருளாக வழிபடுவது கவுமாரம்”

“ஆகா… அவ்வளவு பழமையானவரா முருகன்?”

“ஆமாண்டா... எங்கப்பன் முருகன் பழமையானவர் மட்டுமல்ல... அவரது பெருமையைச் சொன்னா வாய் இனிக்கும் தெரியுமா”

“ஆமாம் பாட்டி, திருப்புகழ் பாடப் பாட வாய் மணக்கும்னு சொல்லுவாங்க”

“உண்மை. திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை தான்”

“உண்மையாவா... திருவண்ணாமலை சிவன் கோயில் தானே? அங்கே முருகன் எப்படி வந்தார்?”

“ஏன்டா... சிவனோட மகன் தானே முருகன்! நீயும் உன் மகனும் ஒரே வீட்ல இருக்கலையா...”

“பாட்டி... ஒரு தெய்வத்தை தானே கோயிலில் முன்னிலைப்படுத்துவாங்க''

“திருப்புகழை தந்தவர் அருணகிரிநாதர். அவர் ஒரு பெண் பித்தர். முருகப்பெருமான் அவரை ஆட்கொண்ட போது திருப்புகழைப் பாட ஆணையிட்டார்''

“அவர் பெண் பித்தரா விளக்கமா சொல்லு”

அதை ரசித்த பாட்டி

'' திருவண்ணாமலையில் முத்தம்மை என்று ஒரு பெண் இருந்தா. கோயிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வந்தாள். அவளுக்கு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் இருந்தன. 'அருணகிரி' ன்னு பெயர் வச்சா. அவன் சின்ன வயசுல இருந்தே யார் பேச்சையும் கேட்கலை. சிற்றின்பத்தில் ஈடுபட்டான். அவனோட அப்பா ஓடிட்டாரு. முத்தம்மைக்கும் உடல்நலம் பாதிக்கவே மகளிடம் 'தம்பிய பாத்துக்கோ'ன்னு சொல்லி உயிரை விட்டாள்”

“அதன் பிறகாவது திருந்தினாரா?”

“ பெத்தவளாலே முடியல. அக்கா என்ன செய்வா பாவம் கொட்டம் அதிகமாச்சு. சொத்தெல்லாம் போச்சு. அதோட தோல் நோயும் வந்துச்சு. பின்பு தான் புத்தி வந்தது. குற்ற உணர்வு பெருகியது. திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி குதிச்சார்”

“ அட கடவுளே... அப்புறம் என்னாச்சு?'

“அருணகிரியை கைகளை நீட்டி தாங்கிப் பிடிச்சாரு முருகப்பெருமான். அப்போ என்ன சொன்னார் தெரியுமா? 'சும்மா இரு, சொல் அற' ன்னு சொல்லி ஜபமாலை ஒன்றை கொடுத்து விட்டு மறைஞ்சுட்டாரு முருகன்”

“அதிர்ஷ்டக்காரரா இருக்காரே அருணகிரி''

''அதில் என்ன சந்தேகம்? அவருக்கு தோல் நோயும் மறைஞ்சிடுச்சு. 12 ஆண்டு தவத்தில ஆழ்ந்தாரு. காட்சியளித்த முருகன், ' என் திருப்புகழை பாடு'ன்னு சொன்னார். அதற்காக அவரது நாக்கில் “முத்தைத்தரு பத்தி திருநகை” என்னும் திருப்புகழின் முதலடியை எழுதி கொடுத்து மறைஞ்சிட்டார்.

'ஓ...'

“அதில இருந்து திருப்புகழ் பாடல் அருணகிரிநாதர் பாட ஆரம்பிச்சாரு. அவர் பாடிய முதல் பாட்டு இது”

முத்தைத் தரு பத்தித் திரு நகை அத்திக்கிறைசத்தி சரவண முத்திக்கொரு வித்துக் குருபர...

“தாள லயத்தோடு அற்புதமா இருக்கே”

“உச்சரிப்பு பழக திருப்புகழின் இந்த பாட்டை பாடச் சொல்லுவாங்க. உங்க அப்பனுக்கும் அப்படித்தான் பாட வெச்சோம்”

“அப்ப ஏன் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுக்கல?”

“ம்ம்ம்... உங்க அம்மா, அப்பாவிடம் கேளு”

“கேக்கத் தான் போறேன் பாட்டி”

“அருணகிரி சும்மா இல்ல. முருகனோட கட்டளைப்படி கோயில்களுக்குப் போய் பாடினாரு. அவர் புகழ் பரவியது. பிறகு திருவண்ணாமலை வந்த அருணகிரிநாதர் மீது சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகன் பொறாமைப்பட்டான். அவன் ஒருமுறை திருவண்ணாமலை மன்னரான பிரபுடதேவனிடம், 'நான் காளியை வரவழைக்கிறேன். அருணகிரிநாதரால் முருகனை வரவழைக்க முடியுமான்னு சவால் விட்டான்”

“அட... இரண்டு தெய்வமும் வந்துச்சா”

“மன்னர் முன்னிலையில் போட்டி நடந்தது. முதலில் சம்பந்தாண்டான் பாடினான். காளி வரவில்லை. அடுத்து அருணகிரிநாதர் பாட முருகன் காட்சியளித்தார். தோற்றுப்போன அவன் பழிவாங்க துடித்தான். மன்னருக்கு பார்வைக் கோளாறு ஏற்பட, 'தேவலோகம் போய் பாரிஜாத மலரை கொண்டு வந்தால் பார்வை சரியாகும். இதைச் செய்யும் ஆற்றல் அருணகிரிக்கு இருக்கு' என்றான் சம்பந்தாண்டான். இதனை ஏற்று அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் உடம்பில் இருந்து தன் உயிரைப் பிரித்தார். இறந்த கிளி ஒன்றின் உடம்பிற்குள் புகுந்து தேவலோகத்துக்கு பறந்தார். இதை மறைந்து நின்று பார்த்த சம்பந்தாண்டான் அவரது உடலை உடனடியாக எரிச்சான்”

“ அப்புறம் என்னாச்சு?”

“ பாரிஜாத மலருடன் வந்த அருணகிரிநாதர் கிளி வடிவில் சென்று மன்னரிடம் மலரை ஒப்படைத்தார். அதன்பிறகு கிளி உருவிலேயே கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி பாடல்களை பாடினார். இதன்பின் ஒரு ஆனி மாத பவுர்ணமியன்று முருகன் திருவடியை அடைந்தார். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து விழுந்த அருணகிரிநாதரை தாங்கிப் பிடித்த இடத்தில் 'கோபுரத்து இளையனார்' என்ற பெயரிலும், கம்பத்தில் காட்சியளித்த இடத்தில் 'கம்பத்து இளையனார்' என்ற பெயரிலும் முருகன் வீற்றிருக்கிறார்”

“அறுபடை வீடு பத்தி கேள்விப் பட்டிருக்கேன். இந்த வரலாறு தெரியாதே”

“அறுபடை வீடுகளைத் தாண்டி ஏராளமான கோயில்களில் முருகன் அருள்புரிகிறார். இதை அவர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் தெரியுமா?'

''பாட்டியும், பேரனும் பேச ஆரம்பிச்சா... பொழுது போறதே தெரியாம இருக்கீங்களே... முதல்ல நம்ம குழந்தை மதியை டியூஷன்லருந்து கூட்டிட்டுவாங்க.' என மனைவி தேவந்தியின் குரல் கேட்டது.

“மணியாயிடுச்சு. கூட்டிட்டு வா ராசா''

“ஆமாம் நேரம் போனதே தெரியல”

“ இன்னும் ஆறு மாசம் இங்க தானே இருக்க போறேன். வாரத்துக்கு ஒரு கோயில் பத்தி சொல்றேன்.'' என்றாள் பாட்டி.

-இன்னும் இனிக்கும்பவித்ரா நந்தகுமார்

94430 06882

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us