ADDED : மே 02, 2023 01:11 PM

மகான்கள் யாருக்கு எப்படி அருள்புரிவார்கள் என யாருக்கும் தெரியாது. அதற்கு உதாரணமாக குஜராத்தைச் சேர்ந்த தம்பதியர் வாழ்வில் நடந்த நிகழ்வை பார்ப்போம்.
ஒருநாள் அதிகாலையில் அந்த குஜராத்தி பெண் கணவரை எழுப்பி நாளிதழ் ஒன்றின் பெயரைச் சொல்லி உடனே வாங்கி வருமாறு வற்புறுத்தினாள். மனைவி திடீரென இப்படி சொல்கிறாளே என மலைத்தார் கணவர்.
''நீங்கள் முதலில் வாங்கச் செல்லுங்கள். பிறகு நடந்ததைச் சொல்கிறேன்'' என்றாள். கணவரும் நாளிதழை வாங்கி வந்தார். நாளிதழைப் புரட்டிய அந்த பெண், குறிப்பிட்ட விளம்பரம் ஒன்றில் மகான் ஒருவரின் படத்தைக் காட்டி, ''இவர் தான்... இவரே தான்'' என ஆரவாரம் செய்தாள். கணவரிடம், ''இவர் எங்கிருக்கிறார் என்பதை விசாரியுங்கள்'' என உணர்ச்சிவசப்பட்டாள்.
''என்னாச்சு உனக்கு'' என்று கணவர் கேட்க இரவில் கனவு கண்டதாகவும். அதில் காவி உடுத்திய துறவி ஒருவர் வீட்டுவாசலில் வந்து நின்றார். அவரை அழைத்து ஒரு ஆசனத்தில் உட்காரச் செய்தேன். ''நீ தான் என்னை வந்து பார்க்கவில்லை; நானாவது உன்னை பார்க்கலாம் என வந்தேன்'' என்றார். 'சுவாமி! இது என்ன நியாயம்... நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என தெரியாது. எப்படி என்னால் வர முடியும்' எனக் கேட்டேன். அவரோ, 'அப்படியா... நான் யார் என உனக்குத் தெரியணுமா? குறிப்பிட்ட நாளிதழின் பெயரைச் சொல்லி அதைப் பார்த்தால் உண்மை புரியும்'' என்றார். அத்துடன் கனவு கலைந்து விட்டது. 'கனவில் வந்தவரைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் நாளிதழ் வாங்கச் சொன்னேன்' என்றாள்.
அதில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் ஆதிசங்கரருக்கு மண்டபம் எழுப்பி கும்பாபிேஷகம் செய்ய இருக்கும் நிகழ்ச்சிகளின் விபரம் மஹாபெரியவர் படத்துடன் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் கனவில் தோன்றிய மகான் இவரே என அந்த பெண் ஆரவாரித்தாள்.
மஹாபெரியவரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார் கணவர். மூன்று மாதம் கழித்து மனைவியுடன் தரிசனத்திற்காகப் புறப்பட்டார். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்தார். குஜராத்தி
பெண் அங்கு வந்து சுவாமிகளை தரிசித்து மகிழ்ந்தாள். தான் கண்ட கனவு பற்றி அவள் விவரித்த போது ஏதும் அறியாதவர் போல கேட்டார். ''நான் கனவில் வந்தேனா... கனவு எப்போது வந்தது'' என்று மட்டும் கேட்டார். 'சரியான தேதி நினைவில் இல்லை' என்றாள். ''அன்று பவுர்ணமி தானே'' எனக் கேட்டார் அவர். அந்தப்பெண் மெய் சிலிர்த்துப் போனாள். காரணம் அன்று அவள் பவுர்ணமி விரதமிருந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com