
எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் பேராற்றல் சிவம். இந்த ஆடல் தான் பிரபஞ்சத்தை உருவாக்கியது.
இப்படி சிவபெருமானின் ஆடல் கலையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐவகைத் தொழிலை செய்கிறது. இத்தொழிலை செய்பவர் ஆட்ட நாயகனான நடராஜர். இவர் பெயரைக் கேட்டதும் சிதம்பரம்தான் நினைவுக்கு வரும். இனி மேல் சத்திரவாடா சிதம்பரேஸ்வரரையும் அத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்குள்ள நடராஜர் தில்லை நடராஜரைப் போலவே உள்ளார். இக்கோயில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரியில் உள்ளது.
கோயிலின் பழமை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த பிரமிப்புடனேயே சிதம்பரேஸ்வரர் சன்னதியை அடையலாம். அங்கு நிலவும் அமைதியான சூழல் அவரிடம் எதையும் கேட்க தோன்றாது. என்ன வரம் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என மனநிறைவு உண்டாகும்.
கருவறையில் தீபச்சுடரின் வெளிச்சத்தில் ஒளிர்கிறார் சுவாமி. இவருக்கு அருகிலேயே சிவகாமி சுந்தரி கருணையுடன் ஜொலிக்கிறாள். சுவாமிக்கு வலது புறத்தில் அம்மன் கல்யாண கோலத்தில் இருக்கிறாள். திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டினால் திருமணம் நடக்கும்.
முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வெங்கடசப்பெருமாள் என்ற மன்னருக்கு சிதம்பர நடராஜர் மீது பக்தி அதிகம். கடவுளின் பிரம்மாண்டமான சக்திக்கு முன் நாம் ஒருதுாசு. ஆடாதே, ஆணவம் கொள்ளாதே என்பதை நடராஜர் உணர்த்துவதால் அவர் மீது பக்தி கொண்டார். அதனால் இக்கோயிலில் அழகான நடராஜர் சன்னதியை உருவாக்கினார்.
வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. இதை வழிபட்டு தண்ணீர் ஊற்றினால் தோல் நோய் குணமாகும்.
எப்படி செல்வது: திருத்தணியில் இருந்து நகரி 18 கி.மீ., அங்கிருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், கார்த்திகை சோமவாரம், மஹாசிவராத்திரி.
நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 97039 25593, 93821 63207
அருகிலுள்ள கோயில்: சத்தியவேடு கல்யாண வீரபத்திரர் கோயில் 60 கி.மீ., (கல்யாணம் நடக்க)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97046 49796