ADDED : ஜூலை 11, 2025 08:10 AM

கேரள மாநிலம் குமுளியின் காவல் தெய்வமான காளியை 'மாடிவீட்டு மகாகாளி' என அழைக்கின்றனர். வெள்ளியன்று இங்கு நடக்கும் குருதி பூஜையில் பங்கேற்றால் குறை ஒன்றுமில்லை என்ற மனநிலை உண்டாகும்.
சில நுாற்றாண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில் தங்கி பணிபுரிந்தனர். விலங்குகள் நடமாட்டம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இப்பகுதிக்கு ஒருநாள் வேட்டையாட மன்னர் வந்தார். பயணக் களைப்பால் வருந்திய மன்னருக்கு அங்கிருந்த பக்தர் ஒருவர் தண்ணீரும், பாலும் கொடுத்து உபசரித்தார். மகிழ்ந்த மன்னர் இப்பகுதியை தானமாக வழங்கினார்.
அந்த இடத்தில் துர்கா கணபதி பத்ரகாளி கோயில் கட்டப்பட்டது. முதல் தளத்தில் கருவறை உள்ளது. தரை தளத்தில் வரகு, நவரத்தினம், யந்திரம் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'சடாதார பிரதிஷ்டை' என்கின்றனர்.
1980ல் சிவன்(மகாதேவன்) சன்னதி கட்டப்பட்டது. ஆறுகால பூஜை நடக்கும் இக்கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு உலக நன்மைக்காக தினமும் கணபதி ஹோமம் நடக்கிறது. அப்போது நெய் அவல் விநாயகருக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
செவ்வாய், வெள்ளியன்று இரவு 8:00 மணிக்கு நடக்கும் குருதி பூஜையில் தரப்படும் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் பயம், திருஷ்டி, கிரக தோஷம் விலகும். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ராமாயண மாதம் எனப்படும் ஆடியில் ராமாயண பாராயணம் நடக்கிறது. விண்ணேறிப் பாறையின் உச்சியிலுள்ள மங்கலதேவி கண்ணகிக்கு சித்ராபவுர்ணமி அன்று மட்டும் பூஜை, அன்னதானம் நடக்கிறது.
எப்படி செல்வது: மதுரையில் இருந்து கம்பம் வழியாக 130 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, மாசி மாதம் கும்பபூரத் திருவிழா.
நேரம்: அதிகாலை 5:30 - 11:00 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 85478 54437, 94958 39237
அருகிலுள்ள கோயில்: தேக்கடி தேவி கோயில் 1கி.மீ., (வெற்றிக்கு...)
நேரம்: அதிகாலை 5:30 - 9:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 94473 89736, 99953 02059