
விழுப்புரம் அருகிலுள்ள சிறுவந்தாடு கிராமத்தில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமையில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபட்டால் திருமணம் நடக்கும்.
சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில். விஜயநகர மன்னர் அச்சுதராயர் இங்கு திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தற்போதுள்ள அமைப்பு 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. மண்டபம் முழுவதும் கருங்கல்லாலும், விமானம் மட்டும் சுதையாலும் ஆனதாகும். கருவறையில் மூலவர் சுகாசனத்தில் அமர்ந்து, மகாலட்சுமி தாயாரை மடியில் தாங்கியபடி இருக்கிறார். தாயாரின் வலதுகை பெருமாளை அணைத்த படியும், இடதுகை தாமரை ஏந்தியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் கனகவல்லி தாயார் சன்னதி உள்ளது. எலுமிச்சை மரம் தலவிருட்சமாக உள்ளது.
அர்த்த மண்டபத்தின் கூரையில் பல்லி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலிலுள்ள பல்லி போலவே இதன் உருவ அமைப்பு உள்ளது.
இதை தொட்டு வணங்குவோருக்கு கிரகதோஷம், நோய், திருஷ்டி விலகும். கருவறையின் பின்புறம் நின்றால் மூலவர், தாயார், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் விமானத்தை ஒருசேர தரிசிக்கலாம். திருமணத் தடை உள்ளவர்கள் லட்சுமி நாராயணர் முன்பு மட்டைத் தேங்காய் வைத்து வழிபடுகின்றனர்.பிரசாதமான அதை வாங்கி வீட்டில் வைத்து தினமும் வழிபட்டால் திருமண யோகம் உண்டாகும். பக்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை சாத்தி நெய்தீபம் ஏற்ற நினைத்தது நிறைவேறும்.
எப்படி செல்வது: விழுப்புரத்தில் இருந்து வளவனுார் 10 கி.மீ., இங்கிருந்து மடுக்கரை சாலையில் 5 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, பவுர்ணமி பிரகார உலா, மார்கழி தனுர்பூஜை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 7:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 99428 39774, 82205 85308
அருகிலுள்ள கோயில்: பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயில் 2 கி.மீ., (வெற்றி பெற...)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94439 59995