தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் -- 13

சனாதன தர்மம் -- 13

சனாதன தர்மம் -- 13


ADDED : ஜன 05, 2024 10:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 10:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

சனாதன தர்மம் ஒவ்வொரு காலை பொழுதையும் பரிசாகப் பார்க்கிறது. காலை எழும்போது உற்சாகமாக எழுந்திருக்க வேண்டும். எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைக் காண வேண்டும் என்கிறது சாஸ்திரம். அப்போது தான் மகிழ்ச்சியான எண்ணம் உருவாகும். கோயில்களைச் சுற்றி வசிப்பவர்கள் கோபுரத்தை வணங்குவர்.

உயர்ந்த கோபுரத்தைக் காணும் போது கடவுளை எண்ணுவதோடு உள்ளமும் உயர வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெறும். படுக்கை அறைகளில் கோயில் கோபுரப் படங்களை ஒட்டி வைக்கலாம். காலை எழுந்ததும் கைகளையும் சேர்த்து விரித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். விரல்களில் மகாலட்சுமி, சரஸ்வதி, கவுரி வசிக்கின்றனர்.அவர்களை வழிபட்டால் செல்வம், கல்வி, வீரம்(தன்னம்பிக்கை) குறித்த சிந்தனை நம் உடலில், மனதில் பரவும்.

ஒவ்வொரு அதிகாலைப் பொழுதும் உற்சாகமாகட்டும். ஒவ்வொரு நாளும் வெற்றியாகட்டும் என்கிறது உபநிடதம். காலையில் பின்பக்க (கொல்லைப்புறம்)கதவைத் திறந்த பின்னரே வாசல் கதவைத் திறக்க வேண்டும். ஏனெனில் உறக்கத்தை அருளிய மூத்த தேவிக்கு நன்றி சொல்லி விட்டு பிறகு வாசல் கதவைத் திறந்து மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் என்ன செய்வது என கேட்பது காதில் விழுகிறது. குறைந்த பட்சம் பின்புற ஜன்னலையாவது திறந்த பின்பே வாசல் கதவைத் திறக்க வேண்டும்.

முதியவர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் மகாலட்சுமி. அவள் தினமும் அதிகாலையில் கதவைத் தட்டுவாள். முதியவர் யார் எனக் கேட்பார். நான் தான் மகாலட்சுமி என்பாள். கதவைத் திறந்து விடுவார். ஒருநாள் அவளுக்கு உடல்நலமில்லை. சகோதரியை அனுப்பினாள். அவளும் கதவைத் தட்டினாள். யார் என முதியவர் கேட்க, மகாலட்சுமியின் அக்கா வந்திருக்கிறேன் என்றாள். முதியவர் கதவைத் திறக்காமல் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீ போகலாம் என்றார்.

தினமும் வாசலைத் திறந்து மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். வாசல் தெளித்து கோலமிட வேண்டும். அப்போது தான் முன்னேற்றம் ஏற்படும். பிளாட்டுகளில் வசிப்பவர்கள் இடமில்லையே எனலாம். பரவாயில்லை. அவர்கள் கதவின் இருபுறங்களை நீரால் துடைத்து சிறுகோலமிடலாம்.

ஒருமுறை காஞ்சி மஹாபெரியவரைத் தரிசிக்க பணக்காரர் ஒருவர் வந்தார். விழுந்து வணங்கிய பணக்காரர் தன் குடும்பச்சூழல், தொழில் முடக்கம், மனஅமைதியின்மையை கவலையுடன் தெரிவித்தார். பணக்காரரின் மனைவியிடம், வீட்டில் வாசல் தெளித்து கோலமிடுவது உண்டா எனக் கேட்டார் மஹாபெரியவர். அதற்கு அப்பெண் தலையாட்டினாள். கோலமிடுவது யார் எனக் கேட்டார். வேலைக்காரிதான் கோலமிடுவாள் என்றாள்.

''அம்மா... வாசல் தெளிப்பது ஹிந்துக்களின் கடமை. முதலில் பூமாதேவிக்கு நன்றி செலுத்துகிறோம். இரண்டாவதாக இரவில் நடமாடிய துர்தேவதைகளின் சுவடுகள் கால்களின் மூலம் வீட்டிற்குள் வராமல் தடுக்கிறோம். மூன்றாவதாக சாணம் கிருமி நாசினி. எனவே நீரால் வாசலைத் தெளிக்கிறோம். அதை இல்லத்தரசி செய்வது தான் முறை. நீயே அதைச் செய்'' என்றார்.

அப்பெண்ணும் பின்பற்றினாள். அடுத்தமுறை வரும் போது குறையொன்றும் இல்லாமல் மகிழ்வுடன் இருப்பதாக தெரிவித்தனர். எனவே அதிகாலையில் எழுந்து கடவுளை நன்றியுடன் வழிபடுவோம்.

நாளை நம்பிக்கையுடன் தொடங்குவோம். செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. உடல்நலம், மனநலம், குடும்பநலம், உறவினர் நலம், தொழில்நலம் என எல்லாம்தான். வாசல் தெளிக்கும் போது 'அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக' என மகாலட்சுமியை வரவேற்போம்.



--தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us