ADDED : மே 24, 2024 09:34 AM

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டுமா... அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் வழிபட்ட சிவத்தலமான அகத்தீஸ்வரம் கோயிலுக்கு வாருங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வடுகன்பற்று என்னுமிடத்தில் இந்தக் கோயில் உள்ளது.
முன்னொரு காலத்தில் பார்வதி, சிவன் திருமணத்திற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயத்தில் ஒன்று கூடினர். இதனால் பூமியின் வடபகுதி உயர்ந்து தென்பகுதி தாழ்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் சிவன். அப்போது அவர் ''அடியேன் நினைக்கும் போதெல்லாம் மணக்கோலத்தில் எமக்கு காட்சி தர வேண்டும்'' என வரம் பெற்றார். வழியில் ஒவ்வொரு புனித தலமாக தரிசித்து தென்பகுதிக்கு வந்த அவர், ஓரிடத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே 'அகத்தீஸ்வரம்' என்னும் இத்தலமாகும்.
ஒரு முறை குமரியம்மனை தரிசித்து விட்டு குதிரையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் மன்னர். காட்டுப்பாதையில் ஓரிடத்தில் குதிரை நகர மறுத்தது. அவருடன் வந்த அரண்மனை ஜோதிடர், ' இந்த இடத்தில் தான் தியானத்தில் ஆழ்ந்த அகத்தியர், திருமணக்கோலத்தில் சிவபெருமானை தரிசித்தார்'' என்றார். இதையறிந்த மன்னர் சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். அகத்தீஸ்வரர் என சுவாமியும், அறம்வளர்த்த நாயகி என அம்மனும் பெயர் பெற்றனர். நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வைப்பு தலமாக இது உள்ளது. சோழர்கள், பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் எடுத்துக் கொடுத்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்கிறது ஒரு கல்வெட்டு.
அழகிய மணவாள பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தனி சன்னதியில் இருக்கிறார். விநாயகர், முருகன், நாகர், அகத்தியர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. இங்கு தரிசித்தால் தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு, பிரச்னைகள் விலகும்.
எப்படி செல்வது: n கன்னியாகுமரியில் இருந்து 5 கி.மீ.,
* நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ.,
விசஷே நாள்: திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி, பிரதோஷம்.
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 84384 96509
அருகிலுள்ள தலம்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 6 கி.மீ., (நோய் தீர...)
நேரம்: அதிகாலை 4:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04652 - 246 223