
திறமையிருந்தும் பேச தெரியாததால், கிடைக்க வேண்டியதை கூட பெற முடியாமல் சிலர் தவிப்பர். இவர்கள் பேச்சுத்திறன் பெற, திக்குவாய் பிரச்னைக்கு கடலுார் மாவட்டம் ராஜேந்திரபட்டினம் திருக்குமாரசாமியை தரிசிப்பது நல்லது.
தலவரலாறு: கைலாயத்தில் வேத ஆகமத்தின் உட்பொருளை உபதேசித்தார் சிவன். பாடத்தை கவனிக்காமல் இருந்த பார்வதியை, பரதவர் குலப்பெண்ணாக பிறக்கும்படி சபித்தார். தன் தாயை சபித்ததால் கோபமடைந்த முருகன், அதற்கு காரணமான வேத ஆகம நுால்களை கடலில் வீசினார். ஆத்திரம் கொண்ட சிவன், மதுரையில் ஒரு வணிகர் குலத்தில் பேசும் திறனற்ற குழந்தையாக பிறக்கும்படி முருகனை சபித்தார்.
அதன்படி, பாண்டிய நாட்டில் தனபதி, குணசாலினி என்ற தம்பதிக்கு, 'உருத்திரசன்மர்' என்ற பெயரில் பிறந்தார் முருகன். பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், கடைசியாக எருக்கத்தம்புலியூரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால், சுவாமிக்கு 'குமாரசாமி' என பெயர் உண்டானது.
வேடர் வழிபாடு: இத்தலத்தின் மகிமை அறிந்த தேவர்கள், பூலோகம் வந்தனர். மரங்களின் வடிவில் குமாரசாமியை எண்ணி தவத்தில் ஈடுபட்டனர். காட்டிற்கு வந்த வேடர்கள் மரங்களை வெட்ட முயன்றனர். இதனால் கோபமடைந்த தேவர்கள், அவர்களை வெள்ளெருக்கு மரங்களாக மாறும்படி சபித்தனர். அவர்களும் சிவனை வழிபட்டு பாவம் போக்கி கொண்டனர். அதனால் இத்தலத்திற்கு 'எருக்கத்தம்புலியூர்' என பெயர் வந்தது.
மூலவர் திருக்குமாரசுவாமி சுவேதார்க்கவனேஸ்வரர் என்றும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுஜ நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் முருகன் வீற்றிருக்கிறார்.
தலசிறப்பு: ராஜராஜசோழன் புத்திர பாக்கியம் வேண்டி, வழிபட்டதன் பலனாக ராஜேந்திர சோழன் பிறந்தார். இதனடிப்படையில் இத்தலத்திற்கு ராஜேந்திரபட்டினம் என்ற பெயர் ஏற்பட்டது. மார்ச் 16 முதல் 20 வரை மூலவர் மீது சூரிய ஒளி விழும் நாட்களில் தரிசனம் செய்வது நல்லது.
எப்படி செல்வது: விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ.,யில் ராஜேந்திரபட்டினம்.
விசேஷ நாட்கள்: மகா சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04143 - 243 533, 93606 37784; 99761 73524, 94877 03524.
அருகிலுள்ள தலம்: 16 கி.மீ.,யில் பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோயில்