ADDED : ஜன 16, 2020 05:22 PM

திவ்ய தேசங்களில் ஒன்றாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முழா விளங்குகிறது. அர்ஜூனன் பூஜித்த குறளப்பன் இங்கு மூலவராக இருப்பதால், நம் குறையனைத்தையும் இவர் தீர்ப்பார்.
பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது கேரளப்பகுதிக்கு வந்தனர். பம்பை நதிக்கரையில் நிலக்கல் என்னுமிடத்தில் பெருமாள் சிலை அமைத்து அர்ஜூனன் வழிபட்டான். பின்னர் சிலையை ஆறு மூங்கில்களால் ஆன கட்டுமரத்தில் வைத்து ஆற்றில் விட்டான். கரை ஒதுங்கும் இடத்தில் யாராவது கோயில் கட்டட்டும் என்பதே அவனது எண்ணம். மலையாளத்தில்
'ஆறு முழா' என்பதற்கு 'ஆறு மூங்கில்' எனப் பொருள். சிலையைச் சுமந்த கட்டுமரம் ஆறு மூங்கில்களால் ஆனதால், இத்தலம் 'ஆறுமுழா' எனப்பட்டது. காலப்போக்கில் 'ஆரன்முழா' என மருவியது.
சிலை கரை சேர்ந்த இடத்தில் இளம்துறவி ஒருவர் வாழ்ந்தார். பெரும் பள்ளமாக இருந்த இப்பகுதியைத் தன் தவசக்தியால் மேடாக்கி கோயில் கட்டினார். கேரளாவில் உயரமான இடத்தில் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயரில் மூலவர் இருக்கிறார். தாயார் பெயர் பத்மாசினி. பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் வாமன மூர்த்தியாக இங்கு காட்சியளித்துள்ளார். பலராமருக்கு சன்னதி உள்ளது.
'வல்லங்களி' எனப்படும் படகு போட்டி உருவானது இங்கு தான். அர்ஜூனனின் பிறந்த நாளான ஆவணி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பம்பை நதியில் போட்டி நடக்கும். 300 ஆண்டுக்கும் மேலாக இப்போட்டி நடக்கிறது. இங்குள்ள வன்னி மரத்தின் காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி வீசிட நோய் தீரும்.
எப்படி செல்வது?: பத்தனம்திட்டாவில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆவணி மாத உத்திரட்டாதியன்று வல்லங்களி, தை மாதம் 10 நாள் உற்ஸவம்
நேரம்: அதிகாலை 4:30 - பகல் 12:00 மணி; மாலை 5:00 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு : 0468-223 9310, 231 3010, 99958 66432
அருகிலுள்ள திருத்தலம்: செங்கனுார் மகாதேவர் கோயில் (10 கி.மீ.,)
லோசனன்